மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? இந்தியாவிலேயே முதல் முறையாக இறைச்சி வாங்க அசத்தலான EMI திட்டம்!
கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் எளிய தவணை வசதி மூலம் இறைச்சி வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இஎம்ஐ என்ற ஒரு திட்டம் வந்தவுடன் வாழ்க்கையே அதில்தான் ஓடி கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் கொண்டு சென்றால் ஏசி, 5 ரூபாய் கொண்டு சென்றால் பைக்!, என எளிய தவணை வசதிகள் நிறைய வந்துவிட்டன.
இதற்காக நமக்கு தேவை ஒரு கிரெடிட் கார்டு. இதன் மூலம் இஎம்ஐ வசதியை பெறலாம். ஒரு போன் வாங்குகிறோம் என்றால் அதன் மதிப்பு 30 ஆயிரம் என வைத்துக் கொள்வோம். கிரெடிட் கார்டை கடையில் கொடுத்தால் அவர்கள் அந்த கார்டு மூல் ரூ 30 ஆயிரத்தை பெற்றுக் கொள்வார்கள்.

அந்த ரூ 30 ஆயிரத்திற்கு இத்தனை சதவீதம் வட்டி போட்டு ஓராண்டு, 6 மாதங்கள், ஒன்றரை மாதங்கள் என வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப பிரிக்கப்பட்டு வட்டியும் அசலும் எளிய தவணை வசதி மூலம் செலுத்திக் கொள்ளலாம். அந்த காலத்தில் புடவை, நகை உள்ளிட்டவைகளை இது போல் எளிய தவணையாக செலுத்தி வந்தோம்.
அந்த காலத்தில் மாதம் ஆனால், அந்த கடையின் பிரதிநிதி ஒரு அட்டையுடன் வருவார், பணத்தை வாங்கிக் கொண்டு வரவு வைத்துவிட்டு செல்வார். இது போல், டிவி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், ரேடியோ உள்ளிட்ட பொருட்களுக்கு விஜிபி குழுமத்தினர் இது போன்ற தவணை வசதியை கொடுத்தனர். கை கடிகாரம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தையும் எளிய தவணை வசதி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
அது போல் மளிகை பொருட்களை கூட தவணை மூலம் பெறலாம். இதெல்லாம் சரி, ஆனால் சிக்கன், மட்டனை கூட தவணை முறையில் பெறலாம் என்ற அறிவிப்பை கோவை குனியமுத்தூரில் உள்ள இறைச்சி கடை அமல்படுத்தியுள்ளது. அல் அமீன் என்ற கடையில்தான் இந்த வசதி உள்ளது. இந்த கடையை நடத்தி வருபவர் ரியாஸ்.
ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்து வரும் இவர் தனது கடையில் வாடிக்கையாளர் வசதிக்காக இஎம்ஐ முறையை அமல்படுத்தியுள்ளார். இது வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் அதிக தொகைக்கான இறைச்சி வாங்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த இஎம்ஐ வசதியை பெறலாம். அதாவது 5000 ரூபாய்க்கு மேல் இறைச்சியை வாங்கும் நபர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப 3 மாதம், 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என எளிய தவணை வசதி முறையில் பணத்தை திருப்பி செலுத்தி கொள்ள முடியும்.
தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் மொத்தமாக அதிக அளவு இறைச்சி வாங்குபவர்களுக்கு இந்த எளிய தவணை வசதி பயனுள்ளதாக இருக்கும் என ரியாஸ் தெரிவிக்கிறார். இறைச்சி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமணம், காதுகுத்து, பர்த்டே பார்ட்டி உள்ளிட்ட விழாக்களுக்கு இஎம்ஐ வசதி பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே இறைச்சியை இஎம்ஐ மூலம் வேறு யாரும் கொடுக்கவில்லை, நாம்தான் கொடுக்கிறோம் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவில் மாம்பழங்களுக்கு எளிய தவணை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இறைச்சிகளுக்கு கோவை குனியமுத்தூர் ரியாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். இனி பண்டிகையோ விசேஷங்களோ வந்தால் பெரிய அளவில் கறி வாங்க பணத்திற்கு என்ன செய்வது என யோசனையே வேண்டாம். இருக்கவே இருக்கு அல் அமீன் இறைச்சிக் கடை!












Click it and Unblock the Notifications