கோட்சே பெயரை உச்சரிக்க கோவை போலீஸ் திடீர் தடை- ஜி.ராமகிருஷ்ணன், கோவை ராமகிருஷ்ணன் கடும் சீற்றம்!
கோவை: கோவையில் காந்தியடிகள் நினைவுநாளில் கோட்சே மற்றும் இந்துமதவெறி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் மூத்த இடதுசாரித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த திராவிடர் இயக்கத் தலைவர் கோவை ராமகிருட்டிணன் (ராமகிருஷ்ணன்) ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவுநாள் இன்று நாட்டு மக்களால் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்தியடிகள் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! என பதிவிட்டிருந்தார்.

கோவை நிகழ்ச்சி
இந்நிலையில் மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட இந்திய மக்களின் மாபெரும் தலைவராக விளங்கிய காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற இந்த நாளை "மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்" என்ற தலைப்பின் அடிப்படையில் கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போலீஸ் தலையீடு
இந்த நிகழ்ச்சியில் இடதுசாரிகள், திராவிடர் இயக்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் உறுதி மொழி வாசிக்க மற்றவர்கள் அதனை வழிமொழிந்து உறுதி ஏற்றனர். ஜாதிமத வெறுப்பு அரசியலை விதைத்து மக்களிடையே மதவெறியை உருவாக்கிட துணியும் கோட்சேவின் வாரிசுகளால், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஜி.ராமகிருஷ்ணன் வாசித்து கொண்டிருந்த போது போலீசார் அங்கு வந்து தடுத்து நிறுத்தினர்.

போலீசாருடன் வாக்குவாதம்
மேலும், உறுதிமொழியேற்பில் கோட்சே என்ற பெயரையும் இந்து மதவெறி என்ற வார்த்தையையும் பயன்படுத்தவும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.ராமகிருஷ்ணன், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லை என்று சொல்கிறீர்களா? எனவும் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். காந்தியடிகளை கோட்சே சுட்டுக் கொன்றதால் வழக்கு நடத்தப்பட்டு கோட்சே தூக்கிலிடப்பட்டார் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். ஆனாலும் போலீசார் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மீண்டும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி
சிபிஎம், தந்தை பெரியார் தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கத்தினர் காவல் துறையினருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் "மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்" என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications