கோவை மாணவி தற்கொலை.. சிக்கிய செல்போன் ஆதாரம்! காமக்கொடூர ஆசிரியர் கைது!
கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாணவி மாற்றுச்சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
இதையடுத்து அந்த மாணவியை பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திடுக்கிடும் தகவல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து திடுக்கிடும் தகவல் வெளியானது.

தொடர்ந்து பாலியல் தொல்லை
அதாவது சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரிடமிருந்து தப்பவே மாணவி பள்ளியில் இருந்து விலகியுள்ளார். ஆனாலும் கொடூர ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி பள்ளியை விட்டு சென்ற பிறகும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அலட்சியமாக விட்ட பள்ளி நிர்வாகம்
இந்த கொடுமை குறித்து முன்பே வீட்டில் மாணவி சொல்லி கதறி அழுதுள்ளார். பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், இதனை அப்படியே மூடி மறைத்த பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பல மாணவிகளிடம்..
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிலரது பெயரை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோர்கள் கண்ணீர்மல்க போலீசில் புகார் கொடுத்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையிலும், மாணவி எழுதிய கடிதம் மற்றும் மாணவியின் செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இதுபோல் பல மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.

கைது செய்தனர்
இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட காமகொடூரனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவனுக்கு உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications