பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம்.. கோவையில் பதற்றமோ, பாதிப்போ இல்லை.. செந்தில் பாலாஜி விளக்கம்!
கோவை: கோவை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் இன்று மாலைக்குள் தவறு செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
தேர்தல் வந்தாலே போதும்.. இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை..! பாயும் ஓவைசி
அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்த நிலையில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருது விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், பிசியோதெரபி சங்கம் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலம் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
போலீஸ் நடவடிக்கை
தொடர்ந்து பாஜகவினர் வீடு, அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜகவைச் சேர்ந்த சிலர், சட்டத்தை கையில் எடுத்தனர்.
பாஜக மீது குற்றச்சாட்டு
பாஜகவினருக்கு கோரிக்கைககள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன் வைக்கலாம். ஆனால் அதை விடுத்து சாலை மறியலில் ஈடுபடுவது, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வகையில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பதற்றம் இல்லை
அதேபோல் சமூக வலைதளங்களில், தொலைக்காட்சிகளில் கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன. கோவை மாவட்டத்தில் எந்த அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.