பள்ளி மாணவர்களிடம் திடீரென அதிகரித்த போதை பழக்கம்.. கொங்கு ஏரியா டாப்.. ஆன்லைன் கல்வி முக்கிய காரணம்
கோவை: ஆன்லைன் கல்வி மாணவர்களின் வாழ்க்கைச் சூழலாக மாறிய பிறகு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Recommended Video
குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் போதைபொருள் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும் கள நிலவரங்கள் கலங்கடிக்கின்றன.
சமீபத்தில், மதுக்கரை அருகே போதை ஊசி தகராறு தொடர்பாக 22 வயது வாலிபரை 18 வயது சிறுவன் வெட்டி கொலை செய்த சம்பவம் போதைப்பொருள் மாபியா, அழுத்தமாக கால் பதித்ததை, மக்கள் மனதில் அதிரும்படி பதிவு செய்ய வைத்த ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

ஒரு வருடமாக போதை மருந்து சப்ளை
இன்று, நேற்று கிடையாது. கடந்த ஒரு வருடமாகவே போதைப்பொருள் புழக்கம் இளம் வயதினர் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. போதை ஊசி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள், போதை ஏற்ற, இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏரியாக்களில் போதை பொருட்கள் சப்ளை மிகவும் எளிதாக கிடைக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நரம்புகளில் போதை ஊசி
உக்கடம் அருகே உள்ள சில இளைஞர்கள் ஒன்றுகூடி கை நரம்புகளில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விசாரணை நடத்திய போது அது ஒரு வருடத்துக்கு முந்தைய சம்பவம் என்றும் தற்போது அந்த வீடியோ வெளியாகி இருப்பதும் தெரியவந்தது. 7 இளைஞர்களை காவல் துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் அதிகபட்ச வயது 21 என்ற தகவல் பெற்றோர்கள் மனதில் பெரிய குண்டைத் தூக்கிப் போடுவது போல உள்ளது.

நேரம் கிடைக்கிறது
இந்த பழக்கம் எங்கோ ஓரிடத்தில் நடக்கிறதா, பரவலாகிவிட்டதா என்பதை அறிய, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த, மது மற்றும் போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி ஒருவரிடம் இது தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் கூறிய தகவல் முக்கியமானது: கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மூடிக் கிடக்கின்றன. இதன் காரணமாக மாணவர்களுக்கு பொழுது போக்குவதற்கு அதிக நேரம் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்றுக் கொடுத்தாலும் கூட பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று பயிலக் கூடிய அளவுக்கு நேரத்தை பயன்படுத்துவதை ஒப்பிடும் அளவுக்கு அந்த கல்வியும், ஒழுக்கமும் இல்லை.

செல்போன் சகவாசம்
ஆன்லைன் கல்விக்காக மாணவர்களிடம் கொடுக்கப்படும் செல்போன்கள் அவர்களுக்கு எதிரியாக மாறிவிடுகிறது. செல்போனை பயன்படுத்தி அவர்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது, சமூகவலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் நேரத்தை வீணாக செலவிடுகிறார்கள். இப்படித்தான் ஆன்லைன் மூலமாக போதை பொருட்கள் கிடைக்கும் வழிமுறைகளை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். பிறகு அதற்கு அடிமையாகிறார்கள் .

ஆன்லைன் கல்வி முறை காரணம்
நேரத்தை போக்குவதற்காக மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். விளையாட முடியாது என்பதால் சும்மா கூடி உட்காருகிறார்கள். அங்கு கஞ்சா சப்ளையாகிறது. இது அனைத்துக்கும் காரணம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடப்பதுதான். அவர்களை பிஸியாக வைத்துக் கொள்வதில் தற்போது உள்ள ஆன்லைன் கல்வி முறை தோல்வி அடைந்து விட்டது, என்றார் ஆதங்கத்தோடு. இப்போதெல்லாம் இதற்கு முன்பு இல்லாத வகையில், சிறுவர்கள் போதை பொருளுக்கு அடிமையானதால் தங்கள் மையங்களில் பெற்றோரால் சேர்த்துவிடப்படுவதை பார்க்க முடிகிறது என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா என்னும் கொடிய நோயில் இருந்து தப்பிப்பதற்காக, ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால், இன்னொரு பக்கம் போதை அடிமை என்ற மற்றொரு அரக்கனிடம் சிக்கி இளைஞர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. ஆன்லைன் கல்வி முடித்த பிறகு மாணவர்களிடம் செல்போனை தராமல் தவிர்ப்பது, அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிப்பது, அவர்களை வீட்டை விட்டு தேவை இல்லாமல் வெளியே அனுப்பாமல் இருப்பது உள்ளிட்டவற்றை சில காலமாவது பெற்றோர் கண்டிப்பாக செய்ய வேண்டும். வழக்கமான வகுப்புகள் ஆரம்பிக்கும் வரை இந்த விஷயத்தில் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications