மிலிட்டரி கட், Gun காதல்.. உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் சேர்ந்தது எப்படி? குவிந்த "ரா" தலைகள்!
கோயம்புத்தூர்: உக்ரைன் ராணுவத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞர் எப்படி சேர்ந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இளைஞரின் வீட்டில் தற்போது இந்திய உளவுப்பிரிவான ரா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Recommended Video
உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக இந்திய மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.தமிழக மாணவர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இந்நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் நாட்டின் துணை இராணுவத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது .
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 13ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பிற நாட்டை சேர்ந்தவர்களும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடலாம் என்று அந்நாட்டு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!
விசாரணை
இந்நிலையில், உக்ரைன் அதிபர் கோரிக்கையை ஏற்று கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் என்பவர் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளார். இது குறித்து மத்திய,மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவரின் வீட்டில் ரா அதிகாரிகள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். கோவை மாணவர் எப்படி உக்ரைன் சென்றார், எப்போது சென்றார் என்ற விவகாரங்களை எல்லாம் சேகரித்து வருகின்றனர்.
எப்படி சேர்ந்தார்?
முக்கியமாக சாய் நிகேஷ் எப்படி உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது பற்றி ரா பிரிவினர் விசாரித்து வருகின்றனர். அவருக்கு வேறு ஏதேனும் ராணுவ ரீதியாக தொடர்புகள் உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். சாய் நிகேஷ் வீட்டிற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினரிடமும் ஒன் இந்தியா தரப்பில் பேட்டி எடுக்க முயன்ற போதும் ரா பிரிவினர் பாதுகாப்பால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்
இவர் உக்ரைன் நாட்டிற்காக போராடுவதை அப்பகுதி மக்கள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை விசாரணைக்கு வந்த நிகேஷ் பெற்றோரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு யாரும் நுழையாத அளவிற்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி இருக்கிறார் சாய்நிகேஷ் ரவிசந்திரன்.
ராணுவ காதல்
அதற்காக இந்திய ராணுவத்திற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும், உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவர் சேர்க்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சாய்நிகேஷ் குறித்து விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டை ஆய்வு செய்துள்ளனர் . அப்போது,ஏராளமான ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ராணுவம்
அதேபோல் துப்பாக்கிகள், குண்டுகள் குறித்து நிறைய ராணுவ ரீதியான விவரங்களை, புள்ளி விவரங்களை சேகரித்து அதை வீட்டில் வைத்து படித்து இருக்கிறார்.ராணுவ ரீதியான படங்களையும், கேம்களை கூட ஆடி இருக்கிறார். இதை பற்றி ரா பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை நாட்டிற்கு கொண்டு வர ரா முயன்று வருகிறது. ஏனென்றால் உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையாக உள்ளது. இப்போது இந்தியர் ஒருவர் உக்ரைனில் போரிடுவது இந்தியாவிற்கு சிக்கலாக மாறும்.
இந்தியா சிக்கல்
இதனால் ரா பிரிவு இவரை இந்தியா கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறது. இன்று வீடியோ கால் மூலம் நிகேஷ் தனது பெற்றோர்களிடம் பேசி இருக்கிறார். பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் ஊருக்கு வர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து மத்திய,மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவரை எப்படி மீட்டு கொண்டு வருவது என்று விசாரித்து வருகின்றனர்.
பின்னணி
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சாய்நிகேஷ் ரவிசந்திரன். கடந்த 2018 ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். தற்போது 4 ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது .