என் பவர் தெரியாமல் விளையாடுறீங்க.. எனக்கு பயமே கிடையாது.. ஜாமினில் வந்த டிடிஎப் வாசன் பகீர் வீடியோ
கோவை: டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் வேகமாக சென்றதாக கூறி போலீஸ் வழக்குப்பதிந்த நிலையில் டிடிஎப் வாசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தான் ‛‛என் பவர் தெரியாமல் விளையாடுறீங்க.. எனக்கு பயமே கிடையாது'' எனக்கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் 22 வயது வாசன். இவர் யூடியூப் வைத்துள்ளார். இவர் பைக்கில் சாகசம் செய்தல், வேகமாக பைக்கை ஓட்டி வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து தற்போது போலீசாரின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகியுள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசன், செய்தி ஊடகங்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கும் வாசன்
இவர் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற வீடியோ வெளியானது. இது பெரும் விவாதப்பொருளானது. டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

ஜிபி முத்துவுடன் பயணம்
இந்த நிலையில் டிடிஎப் வாசன், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை தனது சூப்பர் பைக்கில் வைத்து அழைத்து சென்றார். அப்போது சாலையில் எதிர்ப்புறத்தில் இருந்து வாகனங்கள் வந்தாலும் கூட அவர் பைக்கின் வேகத்தை குறைக்காமல் சென்றார். சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் அவர் சென்றார். மேலும் கைகளை விட்டு ஜிபி முத்துவை அலற செய்தார்.

போலீஸ் வழக்கு
இந்த வீடியோவில் டிடிஎப் வாசன் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் ஜிபி முத்து தலைக்கவசம் அணியவில்லை. இதனால் பாதுகாப்பற்ற பயணம் என பல்வேறு தரப்பினர் கூறினார். இந்த வீடியோ வேகமாக பரவியது. கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் வாசன் மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஜாமீனில் விடுதலை
இதையடுத்து போலீசார் அவரை தேடுவதை அறிந்த டிடிஎப் வாசன் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார். 2 பேர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் ஊடகங்களை எச்சரிக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் கூறியது என்ன?
அதில் அவர் பேசுகையில், ‛‛இந்த டிடிஎப் பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது.. ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் நினைச்சிட்டு இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது. எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போன, எல்லா யூ டியூபர்ஸும் சேர்ந்து நீங்கள் பண்ணும் வேலைகள் பற்றி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க.. பேக் நியூஸ் எல்லாம் பரப்பாதீங்க.. இது மிரட்டல் எல்லாம் கிடையாது. யூடியூபர்ஸ்களுக்கு ஒரு வேண்டுகோள். பப்ஜி மதன், இர்பான் உள்ளிட்டவர்களை செஞ்சிட்டாங்க. அடுத்த உங்களை செய்யலாம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications