நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்...கோவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் - ஏன் என்னாச்சு
நான் பேசியதை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று கோவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை: கோவை மக்களை நம்பவே முடியாது. குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிச் சென்றேன். அதை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியில், மொத்தம் 100 வார்டுகளில், 96 இடங்களில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை கோவை மக்கள் வெற்றிபெறச் செய்தனர். அதேபோல், ஏழு நகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை, வெற்றிபெறச் செய்துள்ளனர்.
காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 524 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் 500 மகளிருக்கு தையல் இயந்திரமும் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கூட்டத்தில், நான் பேசியபோது கோவை மக்கள் சொன்ன சொல்ல காப்பாற்ற மாட்டார்கள்...குசும்பு காரர்கள் ஏமாற்றி விடுவார்கள் எனக் கூறினேன். ஆனால், தற்பொழுது திமுகவிற்கு கோவையில் அமோக வெற்றி கிடைத்ததால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

செந்தில் பாலாஜிக்கு நன்றி
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவைக்கு வருகை தருவேன் என கூறினேன். அதே போல் தான் தற்பொழுது வந்துள்ளேன். இந்த வெற்றியைப் பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த வெற்றியை பெற்று தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது முதல்வரின் 8 மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

சொன்னதை வாபஸ் பெற்ற உதயநிதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கோவை பகுதியில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமில் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களுக்கு குசும்பு ஜாஸ்தி. அதேபோல ஏமாற்றமும் அதிகம் அளிப்பவர்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அதனை வாபஸ் பெற்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடனும், மகளிருடனும் உரையாடி செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், "மக்கள் சபையில் பெற்ற மனுக்களுக்குத் தீர்வாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் 524 பேருக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.52.40 லட்சமும், 500 மகளிரின் சுயதொழிலுக்கு உதவியாக 500 தையல் இயந்திரங்களையும் நலத்திட்ட உதவிகளாக வழங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications