என் உயிர் இருக்கும்வரை ஒரு பிடி மண்ணை கூட எடுக்கமுடியாது.. “முடிஞ்சா கை வைங்க” சவால் விட்ட அண்ணாமலை!
கோவை : என் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது, தைரியம் இருந்தால் ஒரு பிடி மண் எடுத்துப் பாருங்கள் என அன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
எத்தகைய தாக்குதலை திமுக தொடுத்தாலும் 2024 தேர்தலில், பாஜக 25 எம்.பிக்களை பெற போவது உறுதி என அடித்துக் கூறியுள்ளார் அண்ணாமலை.
மேலும், திமுக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்களுக்கான அரசு என்றும் விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
திமுக பித்தலாட்டம்! சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்! அன்னூர் ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த அண்ணாமலை!
பாஜக ஆர்ப்பாட்டம்
விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோவை அன்னூர் - ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, "திமுகவினர் கொல்லைப்புறமாக வருவது வழக்கம். அப்படித்தான் அன்னூர் பகுதியில் 3,867 ஏக்கர் நிலத்தை சிப்காட்டிற்கு எடுப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர். திமுகவினர் வியாபாரம் செய்ய, அரசியல் லாபம் பெற சென்னை வந்தவர்கள். சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிட்டு இருந்தால் மானம், ரோசம் இருக்கும். அது விவசாயிகளிடம் உள்ளது.
தரிசு நிலம் எனச் சொல்லி
விவசாயிகள் பற்றி புரிந்து கொண்டவர் காமராஜர் மட்டுமே. அணை கட்டி பல இடங்களில் விவசாயிகளை வாழ வைத்தவர். அன்னூரில் தரிசு நிலம் எனச் சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். அடிமுட்டாள்கள் சேர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அன்னூர் விவசாயிகள் பணக்காரர்களாக வேண்டும் என விரும்பவில்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கணக்குப்படி 48,195 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகள் அமைக்க கையக்கப்படுத்தப்பட்ட நிலங்கள் உள்ளது. ஆனால் அங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.
பித்தலாட்டம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லியை விட தமிழ்நாட்டிற்கு வந்த அந்நிய முதலீடு குறைவு. அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? திமுக பித்தலாட்டம் செய்கிறது. தண்ணீரை வியாபாரம் செய்ய படையெடுத்து வந்துள்ளனர். திராவிட மாடல் அரசிற்கு தேவை உங்கள் நிலம் அல்ல. தண்ணீருக்காக தான் வருகிறார்கள். விவசாயிகள் பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை.
என் உயிர் இருக்கும் வரை
ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, இன்னொரு புறம் டாஸ்மாக் திறந்து வைப்பது தான் திராவிட மாடல் அரசு. அன்னூரில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். எத்தனை நாட்களாக இருந்தாலும் என் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை எடுக்க முடியாது. தைரியம் இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்துப் பாருங்கள். மானமும், ரோசமும் இருக்கும் அரசிற்கு ஒழுங்காக பேசினால் புரியும். இந்த அரசிற்கு ஈகோ அதிகம். இது மக்களுக்கான அரசல்ல. கார்ப்பரேட்களுக்கான அரசு.
நாங்கள் அடிமையல்ல
திமுக கூட்டணிக் கட்சிகளை போல நாங்கள் அடிமையல்ல. திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகள். பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. எத்தகைய தாக்குதலை திமுக தொடுத்தாலும் 2024 தேர்தலில் 25 எம்.பிக்களை பெற போவது உறுதி. சிறைக்குச் செல்ல பாஜக தொண்டர்கள் பயப்பட மாட்டோம்" என்று பேசியுள்ளார்.