கோவையில் நடந்தது தற்கொலை படை தாக்குதலுக்கான முயற்சி.. என்ஐஏ உறுதிபடுத்தியிருக்கிறது: அண்ணாமலை ட்வீட்
கோவை: கோவை மாநகரில் நடந்தது தற்கொலை படை தாக்குதலுக்கான முயற்சி என்று கடந்த 2 வாரங்களாக பா.ஜ.க. சொன்னதை தேசிய புலனாய்வு முகமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது.
இதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபீன் (வயது 28) என்பவர் பலியானார்.

6 பேர் கைது
தமிழகத்தில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ஜமேஷா முபீன் வீட்டில் 75 கிலோ வெடிபொருட்கள், டைரி உள்பட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் உள்பட பல்வேறு விவகாரங்களை வைத்து விசரணை நடத்திய போலீசார், கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), அப்சர்கான் (28), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மத்திய சிறையில்..
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு விசாரணை முகமைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேசிய புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முகமது அசாருதீன் உள்பட 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்துச்சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல இடங்களில் சோதனை
கார் வெடித்த கோட்டை மேடு பகுதி, ஜமேஷா முபீன் வீட்டிலும் சோதனை செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி என்று என்.ஐ.ஏ உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் நடந்தது தற்கொலை படை தாக்குதலுக்கான முயற்சி என்று கடந்த 2 வாரங்களாக தமிழக பா.ஜ.க. சொன்னதை தேசிய புலனாய்வு முகமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிலிண்டர் விபத்து என திமுக கூற முடியாது
கோவையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை சிலிண்டர் விபத்து என திமுக இனியும் கூற முடியாது. தேசிய புலனாய்வு முகமை நடந்த சம்பவத்தை குண்டு வெடிப்பு வழக்கு என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற சோதனையின் போது பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கடவுளின் கருணையால்
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்புடைய 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. என்.ஐ.ஏ இன்று 43 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு ஆழமாக இந்த நெட்வொர்க் வேரூன்றி செயல்பட்டுள்ளது என்பதை நிரூபணம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கடவுளின் கருணையால் கோவை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications