ஸ்கெட்ச் போட்ட அதிமுக ’மாஜி’! நேரம் பார்த்து தாவிய கோவை செல்வராஜ்! மொத்தமாய் சரியும் ஓபிஎஸ் கூடாரம்!
கோவை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓரளவு நன்றாக சென்று கொண்டிருந்த ஓபிஎஸ்-ன் அரசியல் பயணத்தில் திடீர் முட்டுக்கட்டையாக கோவை செல்வராஜ் விலகல் பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அவரது விலகலுக்கு பின்னணி என்ன? அடுத்து அவர் எந்த கட்சியில் சேர போகிறார்? அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உள்ளிட்ட பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது.
அதிமுகவின் இணைந்த கைகளாக இருந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது அதிகாரம் முதல் காரணமாக இரு துருவங்களாக விலகி சென்று விட்டதாகவே கூறுகின்றனர் அதிமுக.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பலகட்ட அரசியல் குழப்பங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இணைந்த போதிலும் மனங்கள் இணையவில்லை என்றே தான் கூற வேண்டும். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.
எடப்பாடிக்கு “செக்”.. மீண்டும் எம்ஜிஆர் “விதி” - சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டுவோம் என ஓபிஎஸ் சபதம்
அதிமுக மோதல்
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களாக மாறத் தொடங்கினர். ஒருவழியாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தவிர கட்சியில் தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் லாவகமாக பெற்றுக் கொண்டார். எவ்வளவு முயன்றும் இரு பதவிகளையும் ஓ.பன்னீர்செல்வத்தால் விட்டுக் கொடுக்க முடிந்ததே தவிர பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காரணம் மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என பலரது ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருந்தது.
எடப்பாடி ஆதரவு
இந்த நிலையில் கட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரிய அளவில் பூதாகரமாய் வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட தொடங்கிய நிலையில் பலரும் எடப்பாடி பக்கமே தங்கிவிட்டனர். 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவும் ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் 3 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே ஓபிஸ்க்கு உள்ளது. அதில் ஒரு எம்எல்ஏ ஓபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி தேனி சையது கான், ராமநாதபுரம் தர்மர், பெங்களூரு புகழேந்தி, தஞ்சை வைத்தியலிங்கம், கோவை செல்வராஜ் உள்ளிட்ட சில முக்கிய புள்ளிகள் ஓபிஎஸ் தரப்பில் நீடித்தனர். இடையில் உசிலம்பட்டி ஐயப்பன் வந்து சேர்ந்தார். தொடர்ந்து ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் என சிலர் ஓபிஎஸ் தரப்புக்கு படையெடுத்து நிலையில் பாஜக ஆதரவும் தனக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் நம்பிக்கையில் இருந்தார்.
கோவை செல்வராஜ்
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓபிஎஸ் தரப்புக்கு பேரிடியாய் வந்து விழுந்தது ஒரு செய்தி. ஓபிஎஸ் தரப்பில் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஓபிஎஸ் மட்டுமல்ல அது இபிஎஸ் அணியினரையும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது. அதாவது ஜெயலலிதா மரணத்திற்கு அமைச்சர்களும் அவர்களது பதவி ஆசையுமே காரணம். சுயநலத்தால் இருவரும் சண்டை இட்டு கொள்கிறார்கள் அவர்கள் தரப்பில் நீடிக்க விரும்பவில்லை என ஒரே போடாக போட்டார்.
பேச்சுவார்த்தைகள் தீவிரம்
இதன் காரணமாக இரு தரப்பினருமே பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாகவும் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் எனக் கூறியிருப்பதன் மூலம் அவர் திமுகவில் தான் சேருவார் என்கின்றனர் கோவை அதிமுகவினர். ஏற்கனவே அதிமுகவில் மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்த ஆறுகுட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவர்தான் தற்போது கோவை செல்வராஜ் விலகலிலும் இருப்பதாகவும், திமுக தலைமையுடன் கோவை செல்வராஜ் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி
மேலும் தமிழக அமைச்சர் ஒருவரும் கோவை செல்வராஜ் திமுகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணிக்கு கோவை செல்வராஜ் செல்லாததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்தவர்களில் கோவை செல்வராஜ் முதலிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக தான் புகழேந்தி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
திமுகவில் ஐக்கியம்
வருங்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இணைந்தால் கூட கோவை செல்வராஜ் சேர்த்துக் கொள்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது. இதன் காரணமாக இருவரும் வருங்காலத்தில் ஒன்றாக இணைந்து விட்டால் தன்னை ஓரங்கட்டி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர் திமுக தரப்புக்கு தாவ இருப்பதாக சொல்கின்றனர். மற்ற மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஓரளவு நிர்வாகிகள் ஆதரவு இருந்தாலும் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை செல்வராஜ் தவிர வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லை. கோவையில் கூடிய கூட்டம் கூட எஸ் பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன் ஆகியோரால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக நிர்வாகிகள் என்றே கூறப்படுகிறது.
காலியாகும் கூடாரம்
விரைவில் திமுகவில் ஐக்கியமாக இருக்கும் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் மீது அதிருப்தியில் இருக்கும் ஆதரவாளர்களையும் திமுகவில் இணைக்க திட்டமிட்டு வருகிறார். கோவையை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு நிலையாக இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டம் தான் வெகுவாக சரியும் எனவும் இதற்கான வேலைகளை கோவை செல்வராஜ் செய்து வருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்த கோவை அதிமுகவினர்.