மக்களுக்கான அரசா? அதானிக்கான அரசா? என்று தெரியலை.. பாஜக ஒரு ஜிஎஸ்டி அரசு.. நெல்லை முபாரக் விமர்சனம்!
கோவை: ஒன்றிய அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் என்றும், ''ஒன்றிய அரசு மக்களுக்கான அரசா அல்லது அதானிக்கான அரசா என தெரியவில்லை என்றும் கோவையில் நெல்லை முபாரக் பேசியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட பொருளாளர் இக்பாலின் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்த இடங்களை தர மாட்டோம்
இரு தினங்களுக்கு முன் சென்னை புறநகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பறந்துர் விமான முனையம் என்ற திட்டத்தை, அப்பகுதி மக்களின் விருப்பத்திற்க்கு மாறாக தமிழக அரசு செயல்படுத்த கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொறள்கிறேன். 12 கிராம மக்கள் தமிழக அரசியல் கட்சிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தின் பின்னர், எவ்வளவு பணம் தந்தாலும் அந்த இடங்களை தர மாட்டோம் என்று 12 கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மீது தினிக்க வேண்டாம்
கடந்த ஆட்சியை போல மக்களை நிர்பந்தபடுத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும், விவசாயிகள் மீது தினிக்க வேண்டாம். இது சம்பந்தமாக, அந்த மக்களை சந்தித்த சென்ற சிலரை சிவகாஞ்சி காவல்நிலையத்தில் கைது செய்து வைத்துள்ளனர். மக்களின் குரலை, அரசின் செவிகளுக்கு எடுத்து கூறும், மக்களமைப்பு குரலை முடக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அமைச்சர்களும், அதிகாரிகளும்
மேலும் தமிழக அரசு வாக்குறுதியில் கூறிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை. சிறுபான்மை இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. சென்னை எட்டு வழி சாலையை பொருத்தவரை முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரை சந்தித்த பொழுது அது வரக்கூடாது என தெரிவித்தார். அதனை பார்க்கும் பொழுது மக்களின் நலனில் முதல்வர் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆனால், அமைச்சர்களும், அதிகாரிகளும் அவர்களது கட்டுப்பாடுகளை இழந்திருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிகிறது. என்று கூறினார்.

செவிடன் காதில் சங்கு ஊதுவது போல்
தொடர்ந்து பேசிய அவர், ஆளும் பாஜக அரசை, 'ஒன்றிய அரசு ஜிஎஸ்டி அரசு என்றும், ஒன்றிய அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல்" என்றும் விமர்சித்தார். இது குறித்து கூறுகையில், ''ஒன்றிய அரசு மக்களுக்கான அரசா அல்லது அதானிக்கான அரசா என தெரியவில்லை. ஒன்றிய அரசு மக்களுக்கு விரோதமாக கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படுகிறது. ஒன்றிய அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல். ஒன்றிய அரசு ஒரு ஜிஎஸ்டி அரசு'' என்றார்.












Click it and Unblock the Notifications