ஈரோடு பாஜக பிரமுகர் கடையில் டீசல் பாக்கெட் வீச்சு.. எஸ்டிபிஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது.. ஐஜி தகவல்
கோவை: ஈரோட்டில் பாஜக பிரமுகர் கடையில் டீசல் பாக்கெட் வீசி தீவைக்க முயன்ற வழக்கில் எஸ்டிபிஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறினார்.
கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலம், கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் சச்சின் பைலட்?.. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழு கூட்டம்.. பரபர விவாதம்
கோவை-ஈரோட்டில் சம்பவம்
அதன்பிறகும் மர்மநபர்கள் கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
ஐஜி பேட்டி
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு, டீசல் பாக்கெட் வீச்சு தொடர்பாக பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
9 சம்பவம் பதிவு
கடந்த 22ம் தேதி மேற்கு மண்டலத்தில் 9 இடத்தில் வாகனம் மற்றும் கடைகளை சேதப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 5 சம்பவமும், மேட்டுப்பாளையம் 2 சம்பவமும், ஈரோடு 1, புளியம்பட்டி 1 என ஒன்பது இடங்களில் எரிபொருள் வீச்சு சம்பவம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ நிர்வாகி கைது
ஈரோடு பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் கடையில் டீசல் பாக்கெட் வீசி எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சதாம் உசேன் 25 கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் தொடர்புடைய அவரின் நண்பர்கள் ஆசிக் 23, கலீல் ரகுமான் 28, ஜாபர் 27 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.
தீவிர விசாரணை
இவர்கள் குற்றத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக திட்டம் தீட்டி சம்பவம் நடைபெறுகிறதா? அல்லது தனித்தனியாக நடைபெறுகிறதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி, சிடிஆர் அனலைஸ், மற்றும் வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நபர்கள் தான்
பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சம்பவம் ஒருநாள் இரவில் நடந்தது. தற்போது கைது நடவடிக்கை தொடங்கி விட்டது. கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருப்பூரில் ஆயிரம் போலீசார், ஈரோட்டில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்'' என்றார்.