கோவை டூ பெங்களூர்.. சட்டென வந்த தகவலால் பரபரப்பு.. தெற்கு ரயில்வே முடிவு என்ன?
கோவை: உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை கேரள மாநிலம் பாலக்காடு வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக பரவிய தகவலால் கொதித்து போன கோவை மக்கள் கடும் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை எர்ணாகுளம் வரை நீடித்த நிலையில் அதுபோல் நீடித்துவிட்டால் கோவைக்கு பெரிய இழப்பு என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிக தளங்கள், ஐடி நிறுவனங்கள், ஏராளமான கல்லூரிகள் அமைந்துள்ளன. இதனால் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்த கோவையில் தங்கி பணிபுரிகிறார்கள். இதேபோல் கோவையில் ஏராளமான கல்லூரிகள் இருப்பதால் கோவையில் பல்வேறு நகர மாணவர்கள் வந்து தங்கி படிக்கிறார்கள். இதன் காரணமாக எப்போதுமே கோவைக்கான ரயில் தேவைகள் அதிகமாக உள்ளது.

கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் தான் கோவை மக்கள் பெங்களூர் செல்லவும், பெங்களூரில் இருந்து கோவை வரவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாமானிய, ஏழை எளிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் ரயிலாக உதய் எக்ஸ்பிரஸ் இருக்கிறது. அதேநேரம் பெங்களூர் கோவை இடையே பகல் நேர ரயில்கள் இருமார்க்கமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் கோவை பெங்களூர் இடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
தற்போதைய நிலையில் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் செல்கிறது. இந்த ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் கோவையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரபல ஊடகத்தில் வெளியான செய்திகளின் படி, உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வாரத்தில் ஒரு ஏசி பெட்டி கூட்டப்பட்டு, சென்னை பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் ரேக் ஷேரிங் அரேஞ்ச் மெண்ட் செய்யட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
வணிக நகரங்களான கோவை பெங்களூரு இடையே சென்னைக்கு நிகராக ரயில்கள் அதிகம் தேவை என்கிற நிலையில் இருக்கும் ஒரு ரயிலையும் பாலாக்காடு வரை நீடிக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெங்களூரில் இருந்து கோவை வரை வந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை எர்ணாகுளம் வரை நீட்டித்து கொண்டது தெற்கு ரயில்வே. அதற்கு பதில் அமிர்தா ரயிலை பாலக்காட்டில் இருந்து கோவை வரை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால் அதனை இன்று வரை செய்யவில்லை.
இதேபோல் பழனி வரை புதிய ரயிலாக பழனி எக்ஸ்பிரஸ் அறிவிக்கப்பட்டு ரயில் விடப்பட்டது. ஆனால் அந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலை முதலில் பொள்ளாச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி பொள்ளாச்சி வரை நீட்டித்தார்கள். அப்படியே பாலாக்காடு வரை நீட்டித்து விட்டார்கள். உண்மையில் திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் பகுதி மக்களுக்காக விடப்பட்ட அந்த ரயிலின் நோக்கமே தற்போது சிதைந்து பாலக்காடுக்கான ரயிலாக மாறிவிட்டது.
எனவே அதுபோல் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்கப்போவதாக வெளியான தகவல் கோவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வந்தே பாரத் கிளம்பும் சமயத்தில் இது கிளம்புவதால், உதய் ரயிலை பாலக்காடு வரை நீடிக்கப் போவதாக செய்தி ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியது. இதற்கு தான் கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை தெற்குரயில்வே எந்தவிதமான விளக்கமும் தெரிவிக்கவில்லை. உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடு வரை நீட்டித்தால் கடும் போராட்டத்தில் இறக்கவும் தயங்க மாட்டோம் என கோவை ரயில் பயணிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications