வயிறு எரியுதா? முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி.. என்ன சொன்னார் தெரியுமா?
கோவை: திமுக ஆட்சியை பார்த்து சிலருக்கு வயிறு எரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் பேசிய நிலையில் அதற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கோவை உண்ணாவிரத்ததில் இன்று சுளீரென பதிலடி கொடுத்தார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் கோவை மாவட்டத்துக்கு திமுக அரசு சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தாமல் திமுக அரசு புறக்கணிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டினார்.
ஐ.பெரியசாமி ஆப்சென்ட் ஏன்..? 'அப்செட்’.. அப்போ கூட அழுத்திச் சொன்னாரே? சலசலக்கும் திமுக வட்டாரம்!
கோவையில் உண்ணாவிரதம்
மேலும் திமுக அரசை கண்டித்து இன்று கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத பந்தல் அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள் உள்பட நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
இந்த உண்ணாவிரதத்தை முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து பேசினார். இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசு தூங்கி கொண்டிருக்கிறது. இந்த கும்பகர்ண திமுக அரசை தூக்கத்தில் இருந்து கண்விழிக்க செய்வதற்காக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நம்மீது முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை பேசி வருகிறார். அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தை கார்ப்பரேட் கம்பெனி ஆட்சி செய்து வருகிறது. அதனை மறந்து முதலமைச்சர் அதிமுக பற்றி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திமுக அரசு திறந்து வைக்கிறது. நாம் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் சூட்டி வருகின்றனர்.
நீட் ரத்து செய்யவில்லையே
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வதாக திமுகவின் தெரிவித்தனர். இன்னும் அதனை செய்யவில்லை. நாம் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அதனை தான் தற்போதும் திமுக அரசு செய்து வருகிறது. அரசு பள்ளியில் 3 லட்சத்துக்கு 80 ஆயிரம் பேர் படிக்கின்றனர். கடந்த 2017-18 ல் வெறும் 9 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதை நினைத்து அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு சுமார் 565 பேர் மருத்துவம் படிக்கின்றனர். மேலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறினோம்.
விருதுகள் குவித்த அதிமுக
10 ஆண்டு தமிழகத்தை அதிமுகவினர் வீணடித்துவிட்டதாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆனால் நாங்கள் 10 ஆண்டு ஆட்சியில் துறைவாரியாக மத்திய அரசிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளோம். ஒவ்வொரு துறையும் சிறந்து செயல்பட்டதால் விருது கிடைத்தது. உள்ளாட்சி துறைக்கு மட்டும் 140க்கும் அதிகமான விருதுகள் பெற்று சாதனை படைத்தது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு செல்லவில்லை. மிளிர்ந்து வீறுநடை போட்டது.
மக்கள் வயிறு எரிகிறது..
திமுக ஆட்சி வந்துவிட்டால் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிடும். இப்போதும் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் தொடர்பான செய்திகளை தினந்தோறும் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வருகிறது. இத்தகைய சூழலில் தான் வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர் திமுக ஆட்சியை குறை சொல்கிறார். அவர்களின் வயிறு எரிகிறது என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் எங்களின் வயிறு எரியவில்லை, உங்கள் ஆட்சியால் மக்களின் வயிறு எரிகிறது ஸ்டாலின் அவர்களே.
நல்ல முதல்வரா ஸ்டாலின்?
ஒரு வாரத்துக்கு முன்பு ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்றார். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின், என்னுடைய மகன் உதயநிதி எம்எல்ஏ நடித்த கலகத்தலைவன் படம் எப்படி ஓடுகிறது என கேட்கிறார். நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமா?. ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் என்ன கேட்டிருக்க வேண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதா?, காய்ச்சல், தொண்டைவலிக்கு சிகிச்சைகள் எப்படி கொடுக்கப்படுகிறது?, தமிழகத்தின் மருந்துகள் இருப்பு பற்றி கேட்டு, மருந்து-மாத்திரைகளை முறையாக அனுப்ப கூறியிருந்தால் நல்ல முதலமைச்சர். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறையில்லை'' என கடுமையாக விமர்சனம் செய்தார்.