திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சிறைப்பிடித்து.. அதிமுகவினர் தாக்க முயற்சி.. பரபரப்பு
கோவை: தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை அதிமுகவினர் தாக்க முயன்றதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேட்பாளர் ஒருவருக்கே போதிய பாதுகாப்பு இல்லாததாக திமுகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதிகாலையில் இருந்து மக்கள் ஆர்வமாக வாக்களிக்க லைனில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இங்கு அதிமுக சார்பாக எஸ்.பி வேலுமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பாக காத்திகேய சிவசேனதிபதி போட்டியிடுகிறார். இதில் சிவசேனாதிபதிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது.
தாக்குதல்
இந்த நிலையில் தொண்டாமுத்தூரில் உள்ள செல்வபுரம் அரசு பள்ளியில் கார்த்திகேய சிவசேனாதிபதியை அதிமுகவினர் தாக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள வாக்குச்சாவடிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி ஆய்விற்காக வந்த போது அவரின் காரை தாக்க முயன்றதாகவும், அவரை பள்ளிக்குள் சிறை வைக்க முயன்றதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
பள்ளி கேட்டை தாண்ட விடாமல் தடுத்து அவரை தாக்க முயன்றதாக கூறப்பட்டது. இது குறித்து பேசிய சிவசேனாதிபதி, என்னை அதிமுகவினர் தாக்க முயன்றனர், என் தொண்டர்களை வெளியே அனுப்பி, என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் . ஆனால் போலீசார் இதை தட்டிக்கேட்கவில்லை. போலீசார் இதை வேடிக்கை பார்த்தனர். தோல்வி பயத்தில் அதிமுகவினர் இப்படி செய்கிறார்கள்.
திட்டமிட்டு செய்கிறார்கள்
திட்டமிட்டு பாஜக, அதிமுக இப்படி செய்கிறது. பொது இடத்தில் எனக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார்கள், காரை சுற்றி நின்று தாக்கினார்கள், என்று கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக திமுகவினர் அங்கு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
போலீசார் பாரபட்சமாக செயல்படுகிறார்கள். தேர்தலில் முறைகேடு நடக்கிறது. இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கார்த்திகேய சிவசேனாதிபதி புகார் அளிக்க உள்ளார்.