பாஜக அடாவடிகள் கண்டனத்திற்குரியவை... "கலவர ஸ்பெஷலிஸ்டுகளை" ஒற்றுமையால் முறியடிப்போம்.. கமல் ட்வீட்
கோவை: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது, பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை என்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட "கலவர ஸ்பெஷலிஸ்டுகளை" ஒற்றுமையால் முறியடிப்போம் என்றும் மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ல நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் யோகி
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பைக் பேரணி
அப்போது புலியகுளம் பகுதியில் இருந்து தேர் நிலை திடல் வரை பாஜகவினர் மோட்டார் வாகன பேரணியை நடத்தினர். அந்தப் பேரணி டவுன்ஹால் பகுதிக்கு வரும்போது, அங்குத் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி, பாஜகினர் செங்கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த சிலரையும் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாக்குதல் பரபரப்பு
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் அங்கு சில கோஷங்களை பாஜகவினர் எழுப்பியதாகவும் அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களும் அங்குக் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினரின் இந்த செயல்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்கு வேட்பாளருமான கமல் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
கலவர ஸ்பெஷலிஸ்டுகள்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான்."கலவர ஸ்பெஷலிஸ்டுகளை" ஒற்றுமையால் முறியடிப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.