திடீர்னு என்ன நடந்தது?.. "இந்து மகாசபை" அமைப்பின் நிர்வாகி விடுவிப்பு.. பரபரக்கும் கோவை போலீஸ்
இந்துமகா சபை அமைப்பின் நிர்வாகி கோவையில் விடுவிக்கப்பட்டார்
கோவை: குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்காததால், குற்றவாளி ஒருவர் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளது, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதற்கு என்ன காரணம்?
கோவை மாநகர காவல் துறையினர் அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் நிர்வாகி மீது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த உத்திரவினை கூடுதல் தலைமைச் செயலாளர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள இந்து கோயில்கள் திடீரென அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டதில் 4 பேர் இறந்துவிட்டார்கள்..
இந்து மதத்தலைவர்கள்
வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அப்போது ஈடுபட்டிருந்தனர். அதேபோல, அண்டை மாவட்டங்களான ஹாஸிகஞ்ச், ஹாத்தியா, பன்ஷ்காளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன... சோஷியல் மீடியாவில் பரவிய தவறான தகவலே இந்த மத ரீதியான கலவரம் வெடிக்க காரணம் என்று கூறப்பட்டது.. அதேபோல, நவராத்திரி விழாவை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வங்கதேசத்தில் இருக்கும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
பாக்சர் பிரேம்
அங்குள்ள இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து போராட்டத்தில்தான் ஈடுபட்டவர்தான் பிரேம்.. பாக்ஸர் பிரேம் என்பார்கள்.. இவர், அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் கோவை மண்டல இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர்.. இப்படி மத மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேமை கைது செய்தனர்.. இதற்கு பிறகு, அடுத்த சில தினங்களிலேயே அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீன்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதே வழக்கில் மறுபடியும் பாக்சர் பிரேம் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்... ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அவ்வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.... இது தொடர்பான ஆவணங்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு, கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. அதேபோல, காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட ஆவணங்களை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
நீர்த்து போனது
அப்போது கோவை மாநகர காவல்துறை சார்பில் குண்டர் சட்டமானது, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி போடப்பட்டிருப்பதும், அந்த ஆவணங்களை 29ம் தேதி வரை, பிரேமுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் அனுப்பாமல் 12 நாட்களாக கிடப்பிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது... வழக்கமாக, குண்டர் தடுப்பு சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டதை 12 நாட்களுக்கும் மேலாக அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தால், அது தானாகவே காலாவதியாகிவிடும் என்பது விதி..
பரபரப்பு - சர்ச்சை
அந்த வகையில், குண்டர் சட்ட உத்தரவு போடப்பட்டு 3 மாதங்கள் கழித்து பிரேமை கைது செய்திருப்பதும் முறையான நடவடிக்கை கிடையாது என்பதும் தெரிய வந்ததால், பிரேம் மீது கோவை காவல்துறை பதிவு செய்திருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்... மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியவர்தான் பிரேம்.. இதற்கான போராட்டத்திலும் ஈடுட்டவரும்கூட.. ஆனாலும், முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தை பதிவு செய்யாமல், தாமதாக தகவல் அளித்து, கடைசியில் குண்டர் சட்டத்தையே நீர்த்து போகும் வகையில் கோவை போலீசார் நடந்து கொண்டுள்ளது விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது.