பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க இலங்கை ஊர்காலதுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் விஜி(28), தினேஷ்(26), ரஞ்சித்(27), பக்கிரிசாமி(45), கமல்(25), புனுது(41) மற்றும் கார்த்திக்(27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.

மீனவர்கள் கைது
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

முதலமைச்சர் கடிதம்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குற்றப்பத்திரிகை
இந்த நிலையில், "கைதான 8 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது எல்லை தாண்டியது, கடல் வளங்களை சேதப்படுத்தியது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் அடைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி வரும் நான்காம் தேதி வரை சிறைகாவில் வைக்க உத்தரவிட்டார் இதனை அடுத்து மீனவர்கள் எட்டு பேரையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இலங்கை போலீசார் அழைத்துச் சென்றனர். புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது சக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications