இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே- நம்பிக்கை தரும் அரசியல் நிலைத்தன்மை: இந்திய தூதரகம்
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றதன் மூலம் அந்நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ஆகியோர் ராஜினாமா செய்ய கோரி 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்களால் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எப்படி பிரதமர் பதவி தரலாம் என்பதுதான் இலங்கை எதிர்க்கட்சிகளின் கேள்வி. இலங்கை நாடாளுமன்றத்தில் தனி ஒருவன் என்ற ரேஞ்சியில் நியமன எம்.பி.யாக இருப்பவர் ரணில் விக்கிரமசிங்கே. மகிந்த ராஜபக்சே கட்சி எம்.பிக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரதமராகி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, தாம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றார். அத்துடன் தற்போது நடைபெறும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்றார் ரணில்

ஆனால் இலங்கை எதிர்க்கட்சிகள், பவுத்த- கிறிஸ்தவ மதகுருமார்கள் என பல்வேறு தரப்பும் ரணில் விக்கிரமசிங்கேவை ஏற்க மறுத்து வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகையில், ரணில் விக்ரமசிங்கே என்பவர் எப்போதுமே ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றுபவர். அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக ஆட்சிக்கு வருகிறார். அதுபோலவே, ராஜபக்சேக்களும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் அதைத் தான் காண்கிறோம் என்றார்.
இதனிடையே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதரகம் தமது வாழ்த்து செய்தியில், இலங்கை பிரதமராக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது.இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் ஜூலி சங் தமது ட்விட்டர் பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இணைந்து செயற்படுவதை எதிர்பார்க்கிறோம். அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதுதான் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications