மோசமடைந்த நித்தியானந்தா உடல்நிலை.. தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்! கைலாசாவில் வசதி இல்லையாம்
கொழும்பு: கைலாசா என்ற தனி நாடை உருவாக்கி இருப்பதாக தெரிவித்து வந்த நித்தியானந்தா தன்னுடைய உடல்நிலை சரியில்லாததால் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கர்நாடக செசன்ஸ் நீதிமன்றம் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிபரபரப்பை கிளப்பினார்.
FACT CHECK: நபிகள் நாயகம் குறித்த அவதூறு.. இந்தியாவை கண்டித்ததா நித்தியானந்தாவின் கைலாசா?
கைலாசா
கைலாசாவின் கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின. கைலாசா ஆப்பிரிக்கா அருகே உள்ள ஒரு தீவு என்ற ஒரு தகவலும் பரவியது.
யூடியூபில் பேச்சு
கைலாசா என்ற யூடியூப் சேனலில் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு உபதேசம் வழங்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன. அவரது பேச்சுக்கள் அனைத்தும் தினசரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி நகைச்சுவையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அடுத்த சில மாதங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
உடல்நிலை மோசம்
இதற்கிடையே கடந்த சில வாரங்கள் முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் ஜூலை 13 ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் மீண்டும் தனது பக்தர்கள் மத்தியில் பேசினார். அப்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் மறு பிறவி எடுத்துள்ளதாகவும் பேசினார்.
தஞ்சம் கோரிய நித்தி
இந்த நிலையில், இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியது தெரியவந்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபருக்கு நித்தியானந்தா எழுதி இருக்கிறார். அதில், "ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. கைலாசாவில் நித்தியானந்தாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.