இலங்கை: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை டிஸ்மிஸ் செய்ய கோரி பவுத்த பிக்கு தொடர் போராட்டம்
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை டிஸ்மிஸ் செய்யக் கோரி பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதனால் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளதால் முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய கோரி பவுத்த பிக்கு அத்துரலிய ரத்ன தேரர் வெள்ளிக்கிழமையன்று போராட்டத்தை தொடங்கினார்.
கண்டியில் உள்ள தலதா மாளிகை முன்பு இன்றும் 3-வது நாளாக அத்துரலிய தேரர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மாத்தளை உள்ளிட்ட இடங்களில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடதப்பட்டது.
திருமலையில் போராட்டம்
திருகோணமலை சிவன் கோவில் எதிரே ஜெயவேந்தன் என்பவர் அத்துரலிய தேரருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் தாங்கள் மூவரும் ஒருபோதும் பதவி விலகப் போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஞானச்சார தேரர ஆதரவு
இதனிடையே கடும்போக்கு பவுத்த பிக்கான பொதுபலசேனாவின தலைவர் ஞானசார தேரர் இன்று அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார். இது தொடர்பாக ஞானசார தேரர் கூறியதாவது:
பிக்குகள் போராட்டம்
அத்துரலிய தேரரின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மூவரையும் பதவி நீக்கம் செய்தாக வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இலங்கை முழுவதும் பவுத்த பிக்குகள் மாபெரும் போராட்டத்தில் குதிப்போம்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு?
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராடுவோம். இவ்வாறு ஞானசார தேரர் கூறினர். தேவாலயங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சகோதரரளின் தந்தையுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குடும்பத்தினருக்கு தொழில் ரீதியாக தொடர்பு உள்ளது என்பது குற்றச்சாட்டு. ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குற்றச்சாட்டு. இதனால்தான் மூவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இலங்கை அரசுக்கு நெருக்கடி
ஆனால் இலங்கை அரசு இந்த போராட்டங்கள், கோரிக்கைகள் குறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் இலங்கை அரசு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்கின்றன கொழும்பு தகவல்கள்.