கடும் பொருளாதார நெருக்கடி... மேலும் ரூ.15,200 கோடி கடன் கேட்ட இலங்கை - உதவ முன் வந்த இந்தியா
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள், நாட்டில் நிலவும் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க உதவுவதற்கு நிதியை வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.
கொழும்பு: இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் அமெரிக்க டாலரை அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,200 கோடி வழங்க இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, இலங்கை கேட்கும் கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். எரிபொருள் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. தினசரியும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
தினசரி நடைபெறும் போராட்டங்களினால் அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. என்ன நடந்தாலும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச. இந்த நிலையில் இலங்கையில் அந்நிய செலாவணியை அதிகமாக தேவைப்படும் இந்த முக்கியமான தருணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... கையெழுத்திட்ட எதிர்க்கட்சி தலைவர்
இந்தியா கடனுதவி
பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இதையடுத்து இந்தியாவிடம் கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது.
டீசல், அரிசி
அதன்படி இலங்கைக்கு 40 டன் டீசல் கப்பலில் அனுப்பப்பட்டது. மேலும் அரிசிகளையும் இந்தியா அனுப்பி வைத்தது. இரு தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. சிங்கள புத்தாண்டையொட்டி கப்பலில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியா வழங்கிய டீசல் வேகமாக தீர்ந்து வருகிறது என்றும் இந்த மே மாதத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் மீண்டும் கடன் கேட்க இலங்கை அரசு முடிவு செய்தது.
நிதி அமைச்சருடன் சந்திப்பு
சமீபத்தில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிரிந்த மொரகொடா இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் அமெரிக்க டாலரை அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,200 கோடி வழங்க இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, இலங்கை கேட்கும் கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிதி உதவி அளிக்க முடிவு
இலங்கை வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை தற்போது செலுத்துவதில் கால அவகாசம் கேட்டு இருப்பது கவலை அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு இன்னும் இரண்டு பில்லியன் டாலர்கள் வரை கடன் உதவி வழங்க முடியும் என்று இந்திய அரசின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை கேட்கும் ரூ.15,200 கோடியை இந்தியா விரைவில் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு உதவுவதன் காரணம்
இலங்கைக்கு இதுவரை இந்தியா, அத்தியாவசிய பொருட்கள், எரி பொருளுக்கான கடன்கள், நாணய பரிமாற்றங்கள் ஆகியவற்றில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, இலங்கைக்கு ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.