பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு... பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை
கொழும்பு: 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தேயிலை, ஆடை, சுற்றுலா வருமானங்களை தான் பிரதானமாக நம்பியுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் முடங்கியது. கடன் அதிகரித்தது.
இதனால் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.

விலை எகிறியது
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கி உதவி வருகின்றன.

இறுதித்தேர்வுகள்
இந்நிலையில் இலங்கையில் உள்ள பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இறுதித்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை பல லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். இதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வை எதிர்கொள்ள தயாராகி வந்தனர்.

பேப்பர் தட்டுப்பாடு
இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பேப்பர் தட்டுப்பாட்டை சமாளிப்பது இயலாத காரியமாக உள்ளது. இதனால் கல்வித்துறை செய்வதறியாது தவித்து வருகிறது. இந்நிலையில் தான் இலங்கையின் மேற்கு மாகாண கல்வித்துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
இதுகுறித்து மேற்கு மாகாணத்தின் கல்வித்துறை மாகாண இயக்குனர் பிரியந்த் ஸ்ரீலால் நோனிஸ் மண்டல இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி உள்ளது. பேப்பர் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேப்பருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளுக்கான இறுதித்தேர்வுகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள 45 லட்சம் மாணவர்களில் 3ல் 2 பங்கு மாணவர்களின் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛ அரசாங்கத்தின் தவறான முடிவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்களும் இன்னும் அச்சிடப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது'' என வருத்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications