அடடா.. இலங்கை நிலைமை இதைவிட "படுமோசமாக" சான்ஸ்.. முக்கியமான 3 காரணங்கள் இதுதான்!
கொழும்பு: அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை கரன்சியின் தொடர் வீழ்ச்சி, உறுதியற்ற அரசியல் தலைமை, தொடர் விடுமுறை ஆகியவற்றால் ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள பிரச்சனைகளால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்த மாதம் இன்னும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இது இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டுள்ளது.
இதனால் அங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

முக்கிய 3 காரணங்கள்
இந்நிலையில் தான் இலங்கையின் பொருளாதார நிலை இந்த மாதம் இன்னும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது. இதற்கு 3 காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் உள்ள உறுதியற்ற அரசியல்கள நிலவரம், இலங்கையின் கரன்சி மதிப்பு தொடர் வீழ்ச்சி, தொடர் விடுமுறை ஆகியவை பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன.

முதல் காரணம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கையின் கரன்சி மதிப்பு சமீப காலமாக படிப்படியாக உயர தொடங்கியது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு 310 என்ற அளவில் புதிய உச்சம் தொட்டது. மேலும் கள்ளச்சந்தை பயன்பாடு 400 என்ற விகிதமாக அதிகரித்துள்ளது. 2020 கொரோனா காலகட்டத்தில் இலங்கையின் கரன்சியின் மதிப்பு சரிய துவங்கிய நிலையில் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளது.

2வது காரணம்
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமைச்சர்கள் முழுவதும் பதவி விலகியுள்ளனர். இதனால் ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கும், பணவீக்கம், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அரசியலில் தலைமை இல்லாத நிலை உள்ளது. கூட்டு அமைச்சரவை என்ற கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பையும் எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டனர். இதனால் நிதி அமைச்சர் இல்லாத நிலை உள்ளது. இது இன்னும் பொருளாதாரத்தை சீர்குலைய செய்யலாம். இத்தகைய உறுதியற்ற அரசியல் நிர்வாகத்தால் இலங்கைக்கு பொருட்கள் அனுப்பும் ஏற்றுமதியாளர்கள் அதில் இருந்து விலகி உள்ளனர். இதனால் பொருட்கள் கிடைப்பதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. தற்போது உணவு, மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளதால் இது இன்னும் அதிகரிக்கும்.

3வது காரணம்
இலங்கையின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுகளையொட்டி இலங்கை அரசு முன்கூட்டியே ஏப்ரல் 11, 12 தேதிகளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் பொது வினியோகம், அத்தியாவசிய பொருட்களின் சேவை முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது இன்னும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஏற்றுமதியாளர்கள் தவிப்பு
இந்நிலையில் இலங்கையில் உள்ள முன்னணி ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேற்கொள்பவர்கள் பொருளாதார பேரழிவை சமாளிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர், கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதினர். இதில் இன்னும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இந்த மாதம் இறுதியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது இன்னும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications