இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச திடீர் விலகல்! ரணில் உட்பட 3 பேர் வேட்பு மனுத் தாக்கல்!
கொழும்பு: இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென அறிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் சீரழிந்ததால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய ராஜபக்சே, உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார். முதலில் மாலத்தீவுக்கும் தற்போது சிங்கப்பூரிலும் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி உள்ளார்.
சிங்கப்பூர் சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். தாம் பதவியேற்ற உடன் இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார் ரணில் விக்கிரமசிங்கே.
இலங்கையில் இன்று முதல் அவசரநிலை சட்டம் அமல்- தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி
ஜனாதிபதி பதவி வாக்கெடுப்பு
இந்நிலையில் இலங்கையின் இலங்கை இடைக்கால ஜனாதிபதி அந்நாட்டு அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்தில் நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட 4 பேர் களத்தில் இருந்தனர். இவர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இருந்தனர்.
சஜித் திடீர் அறிவிப்பு
இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, தாம் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவ்த்துள்ளார். இலங்கையின் நன்மை, மக்கள் நலன் கருதி தாம் போட்டியில் இருந்து விலகுவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாச பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
மூவர் மனுத் தாக்கல்
இதனிடையே ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் அனுரகுமார திசநாயக்கவின் பெயரை விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய ஆகியோரும் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தனவும் முன்மொழிந்தனர்.
இலங்கை வரலாறு
இலங்கையின் எம்.பிக்கள் நாளை நாடாளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இலங்கையில் 1993-ல் பிரேமதாச மறைவுக்குப் பின்னர் டிபி விஜேதுங்கே, இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகித்தார். அப்போது போட்டியின்றி டிபி விஜேதுங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது வாக்கெடுப்பு மூலம் இடைக்கால ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
Recommended Video
தமிழ்க் கட்சிகள் அதிரடி- ரணிலுக்கு நிம்மதி
மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை நியமன எம்.பி.யாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க கொழும்பு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் ரணிலின் எம்.பி. பதவி தப்பி உள்ளது.