கோ கோட்டா போராட்டத்துக்கு வெற்றி.. மாலத்தீவுக்கு தப்பினாரா இலங்கை அதிபர்? திரும்ப வருவாராம்
கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே இலங்கையைவிட்டே தப்பிச்சென்றுவிட்டதாக சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.
இலங்கை தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு!
பொருளாதார சிக்கல்
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
போராட்டம்
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார்.
ராஜபக்ஷே வீடு
பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதிபர் மாளிகை
இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.
அனைத்துக் கட்சிக்கூட்டம்
இதனை தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா தலைமையில் நடைபெற்றது. அதில், " அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும். அதிபட்சம் 30 நாட்கள் சபாநாயகர் அதிபராக பதவி வகிக்க வேண்டும். அதன் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் ஒரு எம்.பியை அதிபராக தேர்வு செய்யும். இடைக்கால அரசை அமைத்து தேர்தல்களை நடத்த வேண்டும்." ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ரணில் ராஜினாமா
தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த ரணில் விக்கிரமசிங்கே பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் வீட்டின் முன் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. போலீஸ் பாதுகாப்பை மீறி ரணிலின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை தீ வைத்து எரித்தனர்.
பதவி விலக கோட்டாபய சம்மதம்
இந்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா கடிதம் எழுதி இருக்கிறார். அதில், அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் பட்டியலிட்டிருந்தார். இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷே ஜூலை 13 ஆம் தேதி முறைப்படி பதவி விலக சம்மதம் தெரிவித்தாக சபாநாயகர் கூறியுள்ளார்.
Recommended Video
வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோட்டாபய ராஜபக்ஷே எங்கு சென்றார் என்ற தகவலே தெரியாத நிலையில் பலரும் அவர் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இடத்தில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அவர், மக்களின் எழுச்சி காரணமாக இலங்கையைவிட்டே தப்பிச்சென்றுவிட்டதாக சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா தெரிவித்துள்ளார். புதன்கிழமை அவர் இலங்கை திரும்புவார் என்றும் கூறியுள்ளார். அவர் மாலத்தீவு தப்பிச்சென்றிருக்கலாம் என்ற தகவல் முன்பே பரவியது குறிப்பிடத்தக்கது.