என்எல்சி விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிடுக. வேல்முருகன் முன்வைத்த முக்கிய கோரிக்கை!
கடலூர்: என்எல்சி சார்பாக விளைநிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட எந்த கருத்தையும் மாவட்ட நிர்வாகமும், என்எல்சி நிர்வாகமும் ஏற்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேச்சுவார்ததைக்காக என்எல்சி நிர்வாகம் வடலூரில் உள்ள மங்கையர்கரசி மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இதனிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்படாததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளிநடப்பு செய்தார்.
என்எல்சி விவகாரம்.. அதிமுக, பாஜக கண்களுக்கு விளைநிலங்கள் தெரியவில்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
வேல்முருகன் கோரிக்கை
அதேபோல் என்எல்சி நிறுவனம் சார்பாக பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு சிக்கல்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், என்எல்சி நிறுவனம் சார்பாக வடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் திருமண மண்டபத்திற்கு வந்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் வாகனத்தை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் அனைத்து கட்சியினரையும் கூட்டி இருக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்
நாம் தமிழர். ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சி களை அழைக்கவில்லை. இதனால் நான் வெளிநடப்பு செய்தேன். நான் கூறிய எந்த கருத்தையும் என்எல்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கூட்டத்தில் விவசாயிகளை அழைத்துப் பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தான் தயாராகி கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து பேசி ஒரு சுமூக தீர்வு காண வேண்டும்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் என்எல்சி நிர்வாகத்தின் அலுவலகத்திலேயே இந்த மாதிரியான கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறான கூட்டங்களை தனியார் திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏன் என்றார். மேலும் பேசிய அவர், இவ்விவகாரத்தில், தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளை அமைத்து முத்தரப்பு பேச்ச வார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.