அடுத்த ஷாக்.. நெய்வேலி முந்திரி வியாபாரியின் மரணம்.. கதறி அழும் மனைவி.. அரசியல் கட்சிகள் கொந்தளிப்பு
கடலூர் வியாபாரியின் லாக்அப் மரண விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறது
கடலூர்: "என்னை போலீஸ்காரங்க லாட்ஜுக்கு கூப்பிட்டாங்க.. உன் புருஷன் மேல கேஸ் போடாமல் இருக்கணும்னா 10 சவரன் செயினும், பணமும் கேட்டாங்க.. அப்படி தந்தும் என் புருஷனை அடிச்சே கொன்னுட்டாங்க" என்று முந்திரி வியாபாரி மனைவி பிரேமா கதறுகிறார்.. நெய்வேலியில் நடந்த இந்த லாக்அப் மரணம் தற்போது விஸ்வரூபமெடுத்து வருகிறது.
நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை செய்ததால்தான், அவர் இறந்து உள்ளார் என்றும், நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பண்ருட்டி, காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன்.. இவர் ஒரு முந்திரி வியாபாரி.. இவரது மனைவி பெயர் பிரேமா.. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
விசாரணை
கடந்த 28-ம் தேதி திருட்டு வழக்குக்கான விசாரணை என்று செல்வமுருகனை நெய்வேலி போலீஸார் அழைத்து சென்று விசாரித்து, அவரை கைது செய்து விருத்தாச்சலம் சிறையிலும் அடைத்தனர். அங்கு 2-ம்தேதி செல்வமுருகனுக்கு உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.
செல்வமுருகன்
அதனால் அவரை விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்து, பிறகு சிகிச்சை முடிந்து மறுடிபயும் ஜெயிலுக்கே அழைத்து சென்றுள்ளனர்... ஆனால், செல்வமுருகனுக்கு மறுபடியும் உடல்நலம் குன்றி உள்ளது. அதனால் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து அனுமதித்தனர்.. தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு பிறகுதான், செல்வமுருகன் இறந்துவிட்ட தகவலை போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.
வடலூர்
இதனிடையே, கடந்த 28-ம் தேதி வடலூர் செல்வதாக சொல்லிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்று அவரது மனைவி பிரேமா, செல்போனில் தொடர்பு கொண்டால், போனை எடுக்கவில்லை.... அதனால், வடலூர் உட்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கணவன் கிடைக்காததால், பதறிபோன அவர், வடலூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. ஆனால், போலீசாரோ, நெய்வேலி ஸ்டேஷனில் புகார் தருமாறு சொல்லியதாக தெரிகிறது.. அதன்படியே புகார் கொடுக்க சென்றால், பிரேமாவை போலீஸ் தரப்பு மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
லாட்ஜ்
இதுகுறித்து பிரேமா சொல்லும்போது, "என் கணவரை காணோம் என்று புகார் தர போனால், என்னை லாட்ஜுக்கு வரவழைத்தனர் நெய்வேலி போலீசார்.. என் கணவர் மீது வழக்கு போடாமலிருக்க 10 சவரன் செயினும், பணமும் கேட்டார்கள்... அப்படி தரவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்... 30-ம் தேதி என்னை ஸ்டேஷனுக்கு கூப்பிடவும் அங்கே நான் போனேன்.
அழுதார்
என் கணவரை வெளியே அழைத்து வந்தனர்.. என்னை பார்த்ததும் என் கணவர் கதறினார்.. போலீஸ்காரங்க ரொம்ப அடிச்சிட்டாங்க என்று அழுதார்.. திருட்டு கேஸை ஒப்புக் கொள்ளணும்னு அடிச்சாங்களாம்.. என்கிட்டயும் அப்போது சில வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டனர்.. 5,000 ரூபாயும் வாங்கி கொண்டனர்.. அதுக்கப்பறம்தான் என் கணவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
பிரேமா
நெய்வேலி போலீசார் அடித்து, சித்ரவதை செய்ததால்தான் என் கணவர் உயிரிழந்தார்" என்று கதறுகிறார் பிரேமா.. இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்பியிடமும் புகார் அளித்திருக்கிறார். செல்வமுருகனின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து இந்த, மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வேல்முருகன்
"ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செல்வமுருகனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி தருவதுடன், அதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியிருக்கிறார்.
வைகோ
"செல்வமுருகனின் உடலை வெவ்வேறு ஆஸ்பத்திரிகைளை சேர்ந்த 2 மருத்துவர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும், நெய்வேலி போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்" என்றம் மதிமுக வைகோ வலியுறுத்தி உள்ளார். பென்னிக்ஸ் மரணத்துக்கு பிறகு அடுத்தடுத்து நடக்கும் லாக்அப் மரணங்களால் பெரும் பரபரப்பு சூழ்ந்து வருகிறது.