மாணவி உடலை சுற்றி ‘மூன்று அடுக்கு’ பாதுகாப்பு - போலீசார் எப்படி செயல்படுவார்கள்? ‘ஒவ்வொரு அசைவும்'!
கடலூர் : உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Recommended Video
மாணவியின் இறுதி சடங்கு நடைபெறும் பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவியின் உடல் அடக்கத்தின்போது சின்ன சலசலப்பு கூட ஏற்படக்கூடாது என்பதில் போலீசார் கவனமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
மாணவியின் உடலுக்கு வழங்கப்பட்டு வரும் மூன்று அடுக்கு பாதுகாப்பில் போலீசார் எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி உடல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த மாணவியின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு அவரது பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, இன்று காலை பெற்றுக்கொண்டனர். பள்ளி முன்பு நடந்த பெரும் வன்முறை காரணமாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு
மாணவியின் உடலைப் பெற்ற பிறகு இன்று இறுதிச் சடங்கு மாணவியின் சொந்த ஊரில் நடைபெறுவதையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குவிக்கப்பட்ட போலீசார்
மாணவி இறுதிச் சடங்கின்போது தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கும் வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து பெரியநெசலூர் வரை மற்றும் சிறுபாக்கம் என்ற ஊரில் இருந்து விளம்பாவூர் வரை என 12 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில், 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை
இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர். இறுதிச் சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம் எனவும், அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்கு பாதுகாப்பு
மாணவி இறுதிச்சடங்கு மற்றும் அடக்கம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக அந்த வட்டாரம் முழுக்கவே காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் மாணவியின் உறவினர்கள் பலகட்ட சோதனை, சரிபார்த்தலுக்குப் பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல் அடுக்கு
பெரியநெசலூரில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் எப்படி செயல்பாடுகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலை எடுத்துச் செல்லும் வாகனத்தை சுற்றி வளைத்து பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஒரு அணி ஈடுபடும். உடலை சுற்றி நெருக்கமாக நின்று பாதுகாப்பு அளிக்கும் போலீசார் இருப்பார்கள். இதுதான் முதல் அடுக்கு பாதுகாப்பு.

இரண்டாவது அடுக்கு
இறுதி ஊர்வலம் மொத்தத்தையும், முன்பக்கம், பின் பக்கம் மற்றும் இரு புறங்கள் என கவர் செய்து பாதுகாப்பு வழங்கும் போலீசார்களைக் கொண்டது இரண்டாவது அடுக்கு. இதில் ஈடுபடும் போலீசார் அங்கு இருப்பவர்களின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி எந்த செயலிலும் ஈடுபட முடியாது.

மூன்றாவது அடுக்கு
மூன்றாவது அடுக்கு என்பது ஊருக்கு வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும். ஊருக்குள் தேவையற்றவர்கள் நுழையாமல் தடுக்கவும், அதனால் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுப்பதிலும் மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் உள்ள போலீசார் ஈடுபடுவார்கள். இந்த மூன்றாவது அடுக்கு பாதுகாப்பைத் தாண்டி ஊருக்குள் யாரும் உள்ளே வர முடியாது.












Click it and Unblock the Notifications