கடன் தவணை.. மக்களை கட்டாயப்படுத்தினால்.. கடும் நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கடலூர்: நுண்நிதி நிறுவனங்கள் கட்டாயக் கடன் வசூல் செய்வதோ, மக்களைக் கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கவோ கூடாது என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது தமிழகத்தின் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரமணாக பொதுமக்கள் பலரும் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறர்கள்.
வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த வழியில்லாமல் கடன் வாங்கி இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலை பரவுவதற்கு முன்பு பொதுமக்கள் பலர், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள், மகளிர் குழு கடனுதவி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கியிருந்தனர்.
மகளிர் லோன்கள்
அப்படி வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை இப்போதைய சூழலில் கட்ட முடியாமல் உள்ளார்கள். ஆனால் குடும்பத்தை நடத்தவே சிரமப்படும் நிலையில் கடனை கட்டியே ஆக வேண்டும் என சில தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள், மகளிர் குழு கடனுதவி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இந்த பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் தற்போதைய சூழலில் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நுண்நிதி நிறுவன அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். . இந்தக் கூட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரிகள், பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆட்சியர் பாலசுப்பிரமணியம்
பின்னர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பேசுகையல் , "கடலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியுள்ளது. இது மக்களின் நலனுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இதனை எதிர்கொண்டு சமாளிக்கும் விதமாக மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடைமுறைகளை செய்து வருகிறது.. நோய்களைத் தடுப்பதற்குப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கையால் பொதுமக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வருமானம் இல்லாமல் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்
நெறிமுறைகள்
இதனால் தொழில் கடன், தொழில் சார்ந்த விவசாயக் கடன், வியாபாரக் கடன், சுய உதவிக் கடன் முதலான கடன்களுக்குத் தவணை செலுத்த முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடன் தவணை மாற்றியமைப்பது, தவணை நீட்டிப்பு, உற்பத்தி பாதித்த பயனாளிகளுக்குப் புதிய கூடுதல் நடைமுறை கடன் வழங்குதல் ஆகியவற்றை பின்பற்றுமாறு நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. எனவே வங்கிகள் அனைத்தும் இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மகளிர் சுயஉதவிக்குழு கடன்
இதுபோல் அமைப்புசாரா சிறுமுதலீட்டு தொழில் செய்பவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிக அளவில் சிறு கடன்களை நுண்நிதி நிறுவனங்களில் பெற்றுள்ளனர். இந்த நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்கள் மாவட்டத்தில் சில இடங்களில் கட்டாய வசூல் என்ற முறையில் பல இன்னல்களை சந்திப்பதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
கட்டாயப்படுத்தக்கூடாது
எனவே கொரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் கட்டாயக் கடன் வசூல் செய்வதோ, மக்களைக் கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மேலும், கட்டாய வசூல் நடைபெற்றால் அந்தந்த நுண்நிதி நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கூறினார்.