12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்: ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து தர்ணா
டெல்லி: ராஜ்யசபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
டிச.7-ல் அதிமுக உட்கட்சித் தேர்தல்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வெங்கையா நாயுடு திட்டவட்டம்
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, 12 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்தது சரியான நடவடிக்கையே; ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
வெங்கையா நாயுடு விளக்கம்
ராஜ்யசபாவில் இன்றும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை எழுப்பினர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, 12 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது என்கின்றனர்; ஆனால் அமளியில் ஈடுபட்ட எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்யும் உரிமை ராஜ்யசபா தலைவருக்கு உண்டு. 12 எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என நாடாளுமன்ற விதிகள் எதிலும் சொல்லப்படவில்லை. ஆனாலும் எதிர்க்கட்சியினர் நான் தவறு செய்துவிட்டேன் என கூறுகிறார்கள்.. எப்படி என்பதுதான் தெரியவில்லை என்றார்.
பியூஷ் கோயல் கருத்து
மேலும் ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் ராஜ்யசபா தலைவரை விமர்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் தமது பதவிக்குரிய கண்ணியத்தை தரம் தாழ்த்தி இருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்களும் தங்களது நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.
ராகுல் தலைமையில் போராட்டம்
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவை வாபஸ் பெற வேண்டும்; ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்; மோடி அரசு ஒழிக! என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.