இந்தியாவில் மிகஅதிக உச்சம்- ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா- 465 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் மிக அதிக உச்சமாக ஒரேநாளில் 15, 968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிக உச்சத்தைத் தொட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு 2.70 லட்சமாக உயரும்.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வில் தகவல்
24 மணிநேரத்தில் 465 மரணங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 15,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கபப்ட்ட 465 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனைதொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,476 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 2,58,685 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 6,531 பேர் மரணம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி மாநிலங்களில் மகாராஷ்டிராதான் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 1,39,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் மட்டம் 6,531 பேர் கொரோனாவால் மரணித்திருக்கின்றனர். மகாராஷ்டிராவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் டெல்லி 2-வது இடத்தில் இருக்கிறது.
டெல்லி, தமிழ்நாடு
டெல்லியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையானது 6,66,02 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் கொரோனாவால் மொத்தம் 2,301 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியைத் தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 833 ஆகவும் உள்ளது.
குஜராத்தில் 1,711 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் மொத்தம் 1,711 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் மொத்தம் 28,429 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குஜராத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 18,893 ஆக உள்ளது. ராஜஸ்தானில் 15,627, மேற்கு வங்கத்தில் 14,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.