200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.. மீண்டும் வரலாறு படைத்ததாக பிரதமர் மோடி பெருமை
டெல்லி: இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறியுள்ளார். ‛‛இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது. 200 கோடி தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள்'' என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2020ல் கொரோனா பரவ துவங்கியது. மரபணு மாறி 3 அலைகளாக வந்து தாக்கிய கொரோனா வைரசால் ஏராளாமனவர்கள் பாதிக்கப்பட்டனர். கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர்.
இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் தடுப்பூசி ஆய்வுகள் விரைவுப்படுத்தப்பட்டன.

தடுப்பூசி செலுத்தும் பணி
இதையடுத்து கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு 2021 ஜனவரி 16ல் செலுத்த துவங்கப்பட்டது. இந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம்
தற்போது கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 28 ம் தேதி வரை இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

200 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை
இந்நிலையில் தான் இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை இன்று இந்தியா படைத்தது. இந்த சாதனையை மத்திய சுகாதாரதுறை மந்திரி மான்சுக் மாண்டவியா அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்திருப்பது பெருமையான விஷயமாகும். இந்த சாதனைக்காக சுகாதார நல பணியாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

98 சதவீதம் பேருக்கு முதல் டோஸ்
அதன்படி மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று தகுதியுள்ள மொத்தம் 5 கோடியே 63 லட்சத்து 67 ஆயிரத்து 888 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம்
இதற்கிடையே 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில, ‛‛ மீண்டும் இந்தியா வரலாறு படைத்துள்ளது. 200 கோடி தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும், வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்தி உள்ளது. இந்திய மக்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications