ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
டெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை உருக்குலைத்த ஆம்பன் புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக 22 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ20 லட்சம் கோடி நிதி உதவி என்பது கொடூரமான நகைச்சுவை என கடுமையாகவும் சாடினார் சோனியா.
இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில், மேற்கு வங்கம், ஒடிஷாவில் அழிவை ஏற்படுத்திய ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு-ஜாலியன் வாலாபாக் படுகொலையை போன்ற அரச பயங்கரவாதம்: சீமான்
மேலும் ஆம்பன் புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு இடையே நிகழ்ந்துள்ள இப்பேரழிவில் இருந்து அந்த மாநிலங்கள் மீண்டு வர மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வலியுறுத்தி இருக்கிறது.