டாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்!
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தற்போது பேயாட்டம் போட்டு வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என பல்வேறு மாநிலங்களில் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கொரோனவை விரட்டியடிக்க 2 தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் அடங்கவில்லை.
சாதாரண மக்களையும் கொரோனா வெறித்தனமாக தாக்கி வரும் நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 35 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள செவிலியர்களையும் கொரோனா தாக்கி உள்ளது.
இதேபோல் டெல்லியில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான டாக்டர்கள் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.