கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி... 97% பேர் ஹேப்பி... சுகாதார துறை சர்வே
டெல்லி: தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 97% சுகாதார துறை ஊழியர்கள், மத்திய அரசின் நடைமுறைகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதலே கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், உருமாறிய கொரோனா குறித்த செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன.
பிரிட்டன், அமெரிக்க போன்ற நாடுகளில்ல ஏற்பட்டதைப் போல கொரோனா பரவல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கை. இதன் காரணமாக தடுப்பூசி வழங்கும் பணிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி வழங்கும் பணிகள்
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திருப்தி
இதைத்தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 97% சுகாதாரத் துறை ஊழியர்கள், மத்திய அரசின் நடைமுறைகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவின் செயலியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சர்வே
அதில் 97% பேர் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 98% பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம், இடம் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அதேபோல 97% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பக்கவிளைவுகள் குறித்து 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பக்க விளைவு குறித்துச் சொல்லவில்லை
இருப்பினும், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை என 11% பேர் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 46 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12,410 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 1.08 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று கொரோனா உயிரிழப்பு 120 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,54,862 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.