கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி.. அதிகபட்சம் 400 ரூபாய்தான்.. சீரம் நிறுவனம் அசத்தல்!
புதுடெல்லி: கர்ப்பப்பை வாய் நோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே முதல் முறையாக சீரம் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அந்த தடுப்பூசியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த தடுப்பூசியின் அதிகபட்ச விலை 400 ரூபாய்தான்.
மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுவது புற்றுநோய்.
இளம் வயது பெண்கள் முதல் 44 வயதுடைய பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் இந்த நோய் ஏற்படுகிறது.

தடுப்பூசி கண்டுபிடிப்பு
புற்றுநோய் முற்றிவிட்டால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படும் நிலையில், ஆரம்பத்திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக சீரம் நிறுவனம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிப்பு
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது இந்த தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சியில் கடந்த 2018-ம் ஆண்டே பல கட்ட சோதனைகளை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர் தற்போது இந்த தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு நன்றி
இந்த நிலையில் இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்வதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இதுவாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளம் வயது முதல் 44 வயதுடைய பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்காகவே இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் இந்த தடுப்பூசி ஆஸ்பத்திரிகளில் கிடைக்கும்'' என்றார்.

அடுத்த ஆண்டுக்குள் 20 கோடி டோஸ்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரம் நிறுவன சி இஓ ஆதர் பூனவல்லா கூறுகையில், ''புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலை 200 ரூபாய் முதல் 400 ரூபாயாக தான் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த விலை குறித்து இறுதி முடிவு எடுக்க வில்லை. உள்நாட்டில் முதலில் இந்த தடுப்பூசி வழங்கப்படும். அதனை தொடர்ந்தே வெளிநாட்டுக்கு அனுப்பப்படும். அடுத்த 2 ஆண்டுக்குள் நாட்டில் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயார் செய்யப்படும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications