அக்னிபாத் திரும்ப பெறப்படாது! கடற்படை, விமானப்படையில் துவங்கும் ஆள்சேர்ப்பு! அதிகாரிகள் விளக்கம்
டெல்லி: அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்படாது. கடற்படையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கபடும் நிலையில் விமானப்படையில் சேர்வோருக்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24 முதல் துவங்கும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பல இடங்களில் போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இளைஞர்களின் போராட்டம் தொடர்கிறது.

முப்படை அதிகாரிகள் பேட்டி
இந்நிலையில் தான் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.அக்னிபாத் சிறந்த திட்டம். இதுபற்றி முழுமையாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் முப்படையின் அதிகாரிகள் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களது படையில் அக்னிவீரர்கள் சேர்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

கடற்படையில் பெண்கள்
இதில் கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி பேசுகையில், ‛‛கடற்படையில் அக்னிவீரர்களுக்கான முதல் குழுவுக்கு வரும் நவம்பர் 21ல் பயிற்சி துவங்கும். ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் ஆண், பெண் என இருதரப்பு அக்னிவீரர்கள் பயிற்சி மேற்கொள்வர். தற்போது இந்தியாவின் கடற்படை கப்பல்களில் 30 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெண்களையும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. பயிற்சிக்கு பிறகு பெண்கள் போர்க்கப்பல்களிலும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்'' என்றார்.

விமானப்படையில் ஆள்சேர்ப்பு
விமானப்படை சார்பில் ஏர்மார்ஷல் எஸ்கே ஷா கூறுகையில், ‛‛விமானப்படையில் அக்னிவீரர்களுக்கான ஆள்சேர்ப்பு பதிவு ஜூன் 24ல் துவங்க உள்ளது. ஜூலை 24ல் முதல் பேட்ஜ்க்கு ஆன்லைன் தேர்வு நடைமுறை துவங்கும். அதன்பிறகு இவர்கள் விமானப்படையுடன் வரும் டிசம்பர் மாதம் இணைவர். இவர்களுக்கு டிசம்பர் 30ல் பயிற்சி துவங்கப்படும்'' என்றார்.
Recommended Video

திட்டம் திரும்ப பெறப்படாது
முன்னதாக ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறுகையில், ‛‛சியாச்சினில் பணி செய்யும் அக்னிவீரர்களுக்கு சலுகைகள் குறைக்கப்படாது. சேவை நிலைகளில் அக்னிவீரர்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படாது .
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் அக்னிவீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். தற்போது திட்ட ஆய்வுக்காக 46 ஆயிரம் வீரர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டில் 1 லட்சமாக அதிகரிக்கப்படும். எதிர்காலத்தில் அக்னிவீரர்களின் ஆள்சேர்ப்பு 1.25 லட்சமாக உயரும். ஒவ்வொரு ஆண்டும் முப்படைகளில் இருந்து சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர். ஓய்வு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என இதுவரை யாரும் யாரிடமும் கேட்க முயன்றது இல்லை. முப்படைகளுக்கான இந்த சீர்த்திருத்தம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. ராணுவத்தில் அனுபவத்துடன், இளைஞர்களை இணைத்து இளமையாக வைக்க விரும்புகிறோம். இதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்டம் திரும்ப பெறப்படாது'' என்றார்.












Click it and Unblock the Notifications