அயோத்தி ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டுவோம்.. சூளுரையுடன் அல்குவைதா மிரட்டல்..வெளியான ஷாக் தகவல்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த கோவில் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் தான் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என அல்குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று தான் அயோத்தி வழக்கு. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்டகால சட்ட போராட்டம் நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இதையடுத்து 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் ராமர் கோவில் கட்டுமான பணிக்குரிய அறக்கட்டளை அமைக்கப்பட்டு அயோத்தியில் கோவில் கட்டும் பணி துவங்கப்பட்டது. 110 ஏக்கரில் மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை 2020 ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதன்பிறகு பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலின் கர்ப்பகிரஹ பணியை கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். 2023ம் ஆண்டுக்குள் கர்ப்பகிரஹ பணி முடிக்கப்பட உள்ளது. 2024ல் கோவிலின் முழு பணிகள் முடிக்கப்பட்டு தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் 2024ம் ஆண்டின் துவக்கத்தில் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு பேசினார்.

அல்குவைதா மிரட்டல்
இந்நிலையில் தான் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதற்கு பதிலாக பாபர் மசூதி கட்டப்படும் என அல்குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுபற்றி அல்குவைதா பயங்கரவாத அமைப்பினர் பத்திரிகையான கஜ்வா - இ - ஹிந்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அல்குவைதா அமைப்பின் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மதசார்பின்மை கொள்கை நரகம்
இந்தியாவில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் சார்ந்த அழிவை சந்தித்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஏற்படும் பொருள் இழப்பை பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் இழக்கப்பட்ட உயிரும், உடைமைகளும் ஜிகாத்துக்கு பயன்படுத்தி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டு இருக்காது. இந்தியாவின் மதசார்பின்மை எனும் கொள்கை என்பது ஒரு நரகமாகும். ஏனென்றால் இந்து- முஸ்லிம் சகோதரத்துவ முழக்கங்கள் வெறும் பேச்சாக தான் உள்ளது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஜிகாத்தை ஆதரிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்
30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணி பெண்களின் வயிற்றை வெட்டி எரித்தனர். அகமதாபாத்தில் (குஜராத்) கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் எரிக்கப்பட்டனர். இன்று எல்லா இடங்களிலும் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அலிகார் முதல் ஜாமியா உஸ்மானியா (ஹைதராபாத் புறநகர்) வரை அனைத்து இந்துக்களும் கத்திகள், ஈட்டிகள் மற்றும் வாள்களை கூர்மைப்படுத்துகிறார்கள். காய்கறி வெட்டும் கத்தியால் முஸ்லிம்களின் முகத்தையும் தலையையும் வெட்டுவது என்ற பேச்சு இந்துப் பெண்களின் வாயில் இருந்து கேட்கப்படுகிறது.

பாபர் மசூதி கட்டலாம்
அல்குவைதா என்பது இந்திய துணைக் கண்டம் முழுவதும் இஸ்லாம் உலகத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை விரும்புகிறது. இதன்மூலம் சிலை வழிபாடு நிறுத்தப்படும். இதற்கு ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதி முதல் பாபர் மசூதி வரை ஜிகாத் தான் ஒரே தீர்வாக இருக்கும். இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அல்லாவின் பெயரில் மசூதி கட்டப்படும்'' என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உளவுத்துறை கவனிப்பு
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உளவுத்துறை அதிகாரி கூறுகையில், ‛‛இந்தியாவின் சூழலை நன்கு அறிந்த ஒரு நபரால் இது எழுதப்பட்டுள்ளது. இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்'' என தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியின் பிற சாராம்சங்கள் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அல்குவைதா என்றால் என்ன?
அல்குவைதா பயங்கரவாத அமைப்பு ஒசாமா பின்லேடனால் கடந்த 1988 ல் உருவாக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்காவில் இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது. 2011ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவஹாரி பொறுப்பேற்று பயங்கரவாத திட்டங்களை இந்தியாவை குறிவைத்து தீட்டி வந்தார். கடந்த 2014 செப்டம்பர் அல்-ஜவாஹிரி இந்திய துணை கண்டத்தில் அல்குவைதா அமைப்பின் புதிய கிளையை நிறுவ உள்ளதாக வீடியோ வெளியிட்டார். அதன்பிறகு கடந்த 2022 ஏப்ரலில் வெளியான வீடியோவில் கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு போராட்டங்களை ஆதரித்து கல்லூரி மாணவிரை பாராட்டினார்.

கொல்லப்படும் தலைவர்கள்
அதன்பிறகு கடந்த ஜூலை 31ல் ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள இல்லத்தில் வைத்து அல்குவைதா தலைவரான அய்மன் அல் ஜவஹாரி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த அமைப்பில் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அல்கொய்தா அமைப்பின் தெற்காசியப் பிரிவின் நிறுவன தலைவராக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசிம் உமர் என்ற சனா உல் ஹக் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2019ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்பாது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இடித்து மசூதி கட்டப்படும் என அல்குவைதா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications