கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கட்டும்.. சிஏஏவை அமல்படுத்துவோம்.. அமித்ஷா
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இந்தியாவில் போட தொடங்கிய பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் போல்பூரில் சாலை பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விதிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது. இத்தகைய பெரிய பணியை இந்த கொரோனாவுக்கு மத்தியில் செய்ய இயலாது.
கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணி இந்தியாவில் தொடங்கியதும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது குறித்து பரிசீலனை செய்வோம்.
மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்த விவகாரம் எந்த வகையிலும் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மீறவில்லை. அதிகாரிகள் இடமாற்றம் குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம் சட்டரீதியில் சரியானது.
அவை அரசியலமைப்பு சட்டத்தின்படியும் அனுப்பப்பட்டன. இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மம்தா பானர்ஜி பொதுமக்களிடமும் மத்திய அரசிடமும் அவரது கருத்தை முன் வைக்கும் முன்னர் விதிகளை மேற்கோள்காட்டி பேச வேண்டும் என்றார் அமித்ஷா.
ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மேற்கு வங்கத்தில் தாக்கப்பட்டதையடுத்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அதிரடியாக மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையும் நிராகரித்த மமதா பானர்ஜி, 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாநில பணியில் இருந்து விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.