அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல்வருக்கும் 'ஒரே சண்டை..' ட்விட்டரே வேடிக்கை பார்க்குது!
டெல்லி: அசாமில் பள்ளிகளை மூடுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதில் அளித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட் போட்டார். தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் டுவிட் செய்தார். இவ்வாறாக மாறி மாறி இருவருக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் சர்வதேச தரத்தில் அரசுப்பள்ளிகள் உள்ளதாக கூறிக்கொள்ளும் ஆம் ஆத்மி, தனது தேர்தல் பிரசாரங்களில் இதையே மையப்படுத்தி பேசிவருகிறது.
இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக அசாம் மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் வெளியிட்டு இருந்த பதிவுதான் தற்போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் நடக்கும் கருத்து மோதலுக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிகளை மூடுவது ஒருபோதும் தீர்வாகாது
கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ''அசாமில் சில பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்ததோடு, பள்ளிகளை மூடுவது ஒருபோதும் தீர்வாகாது. நாடு முழுவதும் இன்னும் கூடுதலாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து கொதித்துப் போன அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்து இருந்தார். இவ்வாறாக கடந்த 3 நாட்களாக கெஜ்ரிவால் - ஹிமந்த சர்மா இடையே ட்விட்டரில் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.

நான் எப்போது வர வேண்டும்
இந்த நிலையில், கெஜ்ரிவால் இன்று காலை வெளியிட்ட பதிவில், அசாமில் உள்ள பள்ளிகளை பார்க்க நாங்கள் எப்போது வர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட் பதிவில், "பழமொழி ஒன்று உண்டு.. அதாவது, யாராவது நான் எப்போது வர வேண்டும் என்று யாராவது கேட்டால், உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது வாருங்கள் என்று பதிலளிப்பார்கள். இதற்கு ஒருபோதும் வரவேண்டாம் என்று அர்த்தம் கொள்ளப்படும்.

எப்போதுன்னு சொன்னால்தான் வர முடியும்
நான் உங்களிடம் ( ஹிமந்த சர்மா ) கேட்டிருந்தேன். உங்கள் அரசு பள்ளிகளை காண நான் எப்போது வர வேண்டும் என்று.. நீங்கள் பதிலளிக்கவில்லை. நான் எப்போது வரவேண்டும்.. என்று சொல்லுங்கள்.. அப்போதுதான் நான் வர முடியும்'' என்று பதிவிட்டுள்ளார். நேற்று ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட டுவிட் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் கெஜ்ரிவால் இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். நேற்று ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட ட்விட் பதிவில், டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கும் அசாமில் உள்ள பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கெஜ்ரிவாலை கேலி செய்து பதிவிட்டு இருந்தார்.

உங்களின் அறியாமை வேதனை அளிக்கிறது
இது தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட ட்விட் பதிவில், ''கெஜ்ரிவால் உங்களின் அறியாமை வேதனை அளிக்கிறது. நான் உங்களுக்கு உதவுகிறேன். டெல்லியை விட 50 மடங்கு அசாம் பெரியது. எங்களின் 44 ஆயிரத்து 521 அரசு பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். உங்களிடம் ஆயிரம் சொச்சம் பள்ளிகளே உள்ளது. எங்களிடம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் உள்ளனர். மதிய உணவு பணியாளர்கள் 1.18 லட்சம் பேர் உள்ளனர். இதை புரிந்து கொள்ளுங்கள்'' என்று கூறியிருந்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி
மேலும் டெல்லியில் எத்தனை அரசு பள்ளிகள் கடந்த 7 ஆண்டுகளில் துவங்கப்பட்டு உள்ளன என்று கேள்வி எழுப்பிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, 'எந்த தயாரிப்பும் இன்றி அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம் போல் கருத்து தெரிவிக்கிறார் என்றும், நான் கல்வித்துறை அமைச்சராக இருந்தது முதல் இப்போது வரை அசாமில் 8,610 அரசு பள்ளிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும்' பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications