10 மடங்கு அதிகம்.. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பீகாரில் 75,000 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்
டெல்லி: நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட 2021ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பீகாரில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 75 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், முதல் அலையுடன் ஒப்பிடுகையில் 2ஆம் அலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்காயிரம் வரை கூட சென்றது. இருப்பினும், பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மரணங்களைவிட உண்மையான கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
பீகார் உயிரிழப்பு
பீகார் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 1.3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர் இந்த எண்ணிக்கை 2021இல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. அதாவது 2021 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 2.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82,500 அதிகமாகும்.
கொரோனா
இதே ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் பீகார் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 7,717ஆக உள்ளது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் தான் பீகார் தனது கொரோனா உயிரிழப்புகளை மாற்றியமைத்தது. அதாவது விடுபட்ட 3,951 கொரோனா உயிரிழப்புகள் அங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
10 மடங்கு அதிகம்
பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகள் மாற்றியமைக்கப்பட்டாலும் கூட இது கூடுதலாக ஏற்பட்ட மரணங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளது. பீகாரில் கூடுதலாக ஏற்பட்ட உயிரிழப்புகள் என்பது பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகளைவிட சுமார் 75 ஆயிரம் அதிகமாக உள்ளது. அதாவது பதிவு செய்யப்பட்ட மரணங்களைக் காட்டிலும் கூடுதலாக 10 மடங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே, பீகார் மாநிலத்தில் உயிரிழப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாடு உள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
மறைக்கப்படுகிறதா
இருப்பினும், உயிரிழப்புகளில் இந்த வித்தியாசம் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்படுகிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது. முன்னதாக மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் கூடுதலாக 4.8 லட்சம் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.98 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,576 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்புகளும் 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது.