அம்பேத்கர் பற்றி பாஜக தலைவர் பேச மாணவர்கள் எதிர்ப்பு? நிகழ்வையே ரத்து செய்த டெல்லி கல்லூரி
டெல்லி: லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்து உரையாற்ற பாஜக செய்தித்தொடர்பாளருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி நிர்வாகம் நிகழ்வை ரத்து செய்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லேடி ஸ்ரீராம் கல்லூரியின் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவின் கீழ் "அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட அம்பேத்கர்" என்ற தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சிறப்பு பேச்சாளராக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் கலந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய மாணவர் சங்கத்தினர், பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் பங்கேற்கும் நிகழ்ச்சியையே கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். விளிம்பு நிலை சமுதாய மக்களின் நலன்களுக்கு பாஜக எதிராக இருப்பதால் அக்கட்சியை சேர்ந்தவரை அம்பேத்கர் குறித்து பேச அழைக்கக்கூடாது என்று அவர் கூறினர்.

அழைப்பும் நிகழ்வும் ரத்து
மாணவர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்வதுடன் அந்த நிகழ்வையே கைவிடுவதாக லேடி ஸ்ரீராம் கல்லூரி அறிவித்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த குரு பிரகாஷ் பாஸ்வான், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனத்தின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அதிர்ச்சி
கல்லூரி நிர்வாகம் தனக்கு அழைப்பு விடுத்தவுடன் அம்பேத்கர் அரசியலமைப்பை வடிவமைத்தது, அவரது பொருளாதார அறிவு, கல்வி குறித்த அவரது பார்வை, அரசியல் ரீதியாக அவரது அணுகுமுறைகள் தொடர்பான உரையை தயார் செய்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

பாஜகவில் இருப்பது தவறா?
"நான் பாஜகவில் இருப்பதற்காக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்கள். எதன் அடிப்படையில் எனது குரல் தடுக்கப்படுகிறது? எனது கருத்துக்களே எனது அடையாளம். ஒரு கல்வி நிறுவனம் இப்படி இருக்கக்கூடாது. ஒரு ஆசிரியராக இந்த நிகழ்வு எனக்கு மேலும் வருத்தத்தை தருகிறது." என அவர் கூறியுள்ளார்.
Recommended Video

மாணவர்கள் வரவேற்பு
இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்த கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு தெரிவித்து இருக்கிறது. "கல்லூரியின் பட்டியல்-பழங்குடியின துறை இந்த நிகழ்வை கைவிட்டதை நல்ல நகர்வாக பார்க்கிறோம். மாணவர் அமைப்புகள் எதிர்காலத்தில் எங்கு அர்ப்பணிப்பு இருக்கிறது என்பதை நினைவு கூற வேண்டும்." என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications