அஸ்திவாரத்துக்கே ஆபத்து.. கெஜ்ரிவாலுக்கு ‘செக்’ வைக்க பாஜக போட்ட பிளான்! டெல்லியில் இறங்கிய தலைகள்!
டெல்லி : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு செக் வைக்க, டெல்லியில் பெரும் தலைகளை இறக்கி வியூகம் அமைத்துள்ளது பாஜக. பாஜகவின் இந்த வியூகத்திற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறதாம்.
குஜராத்தில் பாஜக கோட்டையை தகர்க்க நினைத்த அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது, டெல்லியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.
டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு தேசிய தலைவர்கள் மட்டுமல்லாது மாநிலங்களில் இருந்தும் முக்கிய புள்ளிகளை பிரச்சாரத்திற்கு இறக்கி, கெஜ்ரிவாலுக்கு கட்டையைப் போட்டிள்ளது பாஜக தலைமை.
பண்டுக்கு சான்ஸ்.. சாம்சனுக்கு பென்ச்.. கடுப்பான கேரள எம்பி! நறுக் பாய்ண்ட் - நெருக்கடியில் பிசிசிஐ
குஜராத் தேர்தல்
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன் முடிவுகள் டிசம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் கோட்டையை தகர்க்கும் இலக்குடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாகப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. பாஜக தேசிய தலைவர்களும் குஜராத்தில் சூராவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று முன்தினத்துடன் அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.
டெல்லி தேர்தல்
அதேநேரம் டெல்லியில் மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து டெல்லி முழுவதும் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மாநகராட்சி தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், குஜராத் சட்டமன்ற தேர்தலைப்போல் டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
குஜராத்தில் ஆம் ஆத்மி
டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவுற இன்னும் 3 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி அள்ளி வீசியுள்ள நிலையில், தங்களது வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பாதிக்குமா என பாஜக தலைவர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பாஜக வியூகம்
இதையடுத்து ஆம் ஆத்மிக்கு செக் வைக்கும் வகையில் பாஜக மேலிடம் வியூகம் வகுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலைப் பயன்படுத்தி ஆம் ஆத்மிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக. குஜராத் பிரசார நேரம் போக, டெல்லியில் இருக்கும் நேரத்தில் எல்லாம் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கெஜ்ரிவால் ஷாக்
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும், டெல்லியில் பாஜகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக இன்று டெல்லி சென்றுள்ளார். அதேபோல, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாஜக தலைவர்கள் டெல்லியில் முற்றுகையிட்டுள்ளனர். பாஜக தலைவர்கள் பட்டாளத்தையே டெல்லியில் இறக்கியுள்ளதால் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஷாக் ஆகியுள்ளார்.
டெல்லியே அச்சாணி
டெல்லி மாநகராட்சி தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகவும் முக்கியமானது. டெல்லியில் முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த பிறகுதான் பஞ்சாப்பில் வேரூன்றியது ஆம் ஆத்மி. இப்போது குஜராத்தில் களம் கண்டிருப்பதற்கும் டெல்லியே அச்சாணி. எனவே, டெல்லியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதில் ஆம் ஆத்மி குறியாக இருக்கிறது. இதனால், குஜராத் செல்வதைக் குறைத்துக்கொண்டு டெல்லியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
பாஜக பிளான் வெற்றி
அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்வதை தடுக்க பாஜக மேலிடம் போட்ட பிளான் பக்காவாக வொர்க் அவுட் ஆகியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்துடன் இறங்கிய ஆம் ஆத்மி, இப்போது டெல்லி கையை விட்டுப் போகாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருப்பதே பாஜகவின் வியூகத்திற்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.
ஒரு இடம் கூட
குஜராத்தில் ஒரு இடத்தில் கூட ஆம் ஆத்மி ஜெயிக்காது என்றும் கூறி இருக்கிறார் அமித்ஷா. குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி எங்கும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். ஆம் ஆத்மி கட்சியின் பெயர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலிலேயே இடம் பெறாது. அதே போல குஜராத்தில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சி நெருக்கடியில் இருக்கிறது. அதன் தாக்கம் குஜராத் தேர்தல் முடிவிலும் தெரியும் எனத் தெரிவித்திருக்கிறார்.