சரியான தொலைவில் பின்தொடர்ந்தோம்.. ஈரான் விமானத்திற்கு அளித்த பாதுகாப்பு பற்றி இந்திய விமானப்படை பரபர
புதுடெல்லி: ஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து இந்திய போர் விமானங்கள் மூலம் அந்த விமானம் எப்படி பாதுகாப்பாக சென்றது என்று இந்திய விமானப்படை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரானில் இருந்து சீனாவுக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்ததபோது திடீரென அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளது..2 நாட்களில் வீடு திரும்புவார் - எம்.ஜி.எம். மருத்துவமனை
வெடிகுண்டு மிரட்டல்
இதையடுத்து உடனடியாக அந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. எனினும் தொழில்நுட்ப பிரச்சினையினால் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து ஈரான் விமானத்தை கண்காணித்தபடி ஜோத்பூர் முதல் பஞ்சாப் எல்லை வரை இந்திய போர் விமானங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சென்றது. இதற்கிடையே அது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரான் விமானத்திற்கு பாதுகாப்பாக
இந்த சம்பவத்தால் இன்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்திய விமானப்படை தரப்பில் இது குறித்து அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரானில் இருந்து வந்த விமானம் இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30MKI போர் விமானங்கள், ஈரான் விமானத்திற்கு பாதுகாப்பாக பறந்தன.
இந்திய வான்வழியை தாண்டும் வரை
பாதுகாப்பான இடைவெளியுடன் போர் விமானங்கள், பயணிகள் விமானத்திற்கு பாதுகாப்பாக இந்திய எல்லையை தாண்டும் வரை சென்றது. விமானம் இந்திய வான்வழியை தாண்டும் வரை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்ததோடு பின் தொடர்ந்தோம். தற்போது விமானம் இந்திய வான் எல்லையை தாண்டி சென்று விட்டது. ஈரான் விமானத்திற்கு டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெய்பூர் அல்லது சண்டிகரில் விமானத்தை தரையிறக்கலாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால், விமானத்தை திருப்பி செல்ல விமானி மறுத்துவிட்டார்.
உரிய விதிகளின் படியே
இதற்கிடையில், தெஹ்ரானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தலை புறக்கணித்து விடுமாறு தகவல் கிடைத்தது. இதனால், விமானம் அதன் இறுதி இலக்கு வரை தொடர்ந்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. இந்திய விமானப்படை உரிய விதிகளின் படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்திய வான்வெளியில் பறக்கும் வரையிலும் விமானப்படை ரேடார்கள் மூலம் ஈரான் விமானத்தை தீவிரமாக கண்காணிப்பில் வைத்திருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.