கோயிலையும் விடவில்லை.. மோசடி மன்னர் சுகேஷ் சந்திரா! 2019 மோசடி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை
டெல்லி: மோசடி மன்னரான சுகேஷ் சந்திரசேகர் மீது 2019 பண மோசடி வழக்கில் சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சுகேஷ் சந்திரசேகர். அதிமுக பிளவுபட்டு இருந்த போது, இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கி இருந்தது.
அந்தச் சமயம் இரட்டை இலை சின்னத்தைத் தனது அணி பெறத் தேர்தல் ஆணையத்துக்கு இந்த சுகேஷ் மூலமே டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ200 கோடி மோசடி: சுகேஷ் சந்திராவின் கூட்டாளி நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்!
குற்றப்பத்திரிக்கை
இது தவிர அவர் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டு இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. குறிப்பாகச் சிறையில் இருக்கும் போதே, அவர் ரூ200 கோடி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தச் சூழலில் 2019இல் பதியப்பட்ட மோசடி வழக்கு ஒன்றில் சிபிஐ அவர் மீது இப்போது குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்து உள்ளது. மோசடி வழக்கில் இப்போது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் அவரது கூட்டாளி சஞ்சய் ஜெயின் பெயரும் இடம் பெற்று உள்ளது.
என்ன வழக்கு
இருவருமே இப்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி இந்த வழக்கு 2020இல் பதிவு செய்யப்பட்டது. முதலில் இந்த வழக்கு 2019இல் திருவள்ளூரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் இது சிபிஐ வசம் சென்றது. 2019 அக்டோபரில் ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலில் ஐடி அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு மேற்கொண்டு இருந்தனர்.
மோசடி
அந்த ரெய்டிற்கு பின்னர் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்ட சுகேஷ் சந்திரசேகர் தன்னை மத்திய அரசின் சட்ட துறை செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளார். மேலும், ரெய்டு விவகாரத்தைத் தீர்க்க தனக்கு ₹ 7.5 கோடி வேண்டும் என்று கேட்டு அழுத்தம் டுத்து உள்ளார். இந்தச் சம்பவத்தில் தான் இப்போது சிபிஐ அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது.
மோசடி எப்படி
பொதுவாக அதிநவீன டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தித் தான் மோசடி போன்கால்களை சுகேஷ் சந்திரசேகர் மேற்கொள்வாராம். கால் வரும் மொபைல்களில் அது அரசு உயர் அதிகாரிகளின் லேண்ட்லைன் எண்களைப் போலவே இருக்கும். எனவே, செக் செய்தாலும் உண்மையில் அதிகாரிகள் அழைப்பதாகவே அவர்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த கால்களைச் செய்தவர் சுகேஷ் சந்திரசேகராக இருப்பார்.
எப்போது
அதேபோலத் தான் மும்பையில் அவர் ரூ.2 கோடியை மிரட்டி பணம் பறித்து இருந்தார். மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர், பிணையில் வெளியே வந்த போது தான் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளார். வழக்கை முடித்து வைக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதாகக் கூறி பணத்தைப் பெறும் சுகேஷ் சந்திரசேகர் அதை ஜாலியாக இருக்கப் பயன்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலையுயர்ந்த பரிசுகள்
மற்றொரு குற்றவாளியான சஞ்சய் ஜெயின், டெல்லியின் பஞ்சாபி பாக்கில் வசிப்பவர். முக்கிய கூட்டாளியான இவர், சுகேஷ் சந்திராவுக்கு தேவையான வழக்கறிஞரை ஏற்பாடு செய்தல், பரோல் உள்ளிட்ட விஷயங்களைப் பார்த்து வந்துள்ளார். இப்படி மோசடி செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உள்ளிட்டோருக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுக்க பயன்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் இப்போது விசாரணை வளையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.