ஐசிஐசிஐ வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் திருப்பம்.. விசாரணை தகவல்கள் கசிவு… அதிகாரி டிரான்ஸ்பர்
டெல்லி: சந்தா கோச்சார் மீதான வங்கிக்கடன் முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அதிகாரியை, சிபிஐ திடீரென பணியிடமாற்றம் செய்துள்ளது.
ஐசிஐசிஐ கடன் முறைகேடு வழக்கில், அந்த வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக், விடியோகான் குழும நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக கடந்த 22ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணையை மேற்கொண்டுவந்த காவல்துறை கண்காணிப்பாளர் சுதான்ஷு தார் மிஸ்ரா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு 23-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
வழக்கில் எந்த காரணமும் இன்றி சுதான்ஷு தார் மிஸ்ரா, தொடக்க நிலை விசாரணையை நிலுவையில் வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே அதுகுறித்த தகவல்கள் கசிந்தன.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போது, அதில் சுதான்ஷு தார் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, புதிய அதிகாரியான மோஹித் குப்தாவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்ட பிறகு, பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி நிதி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது, குறிப்பிடத்தக்கது.