நாரதா ஸ்டிங் ஆபரேஷன்.. 3 சிட்டிங் திரிணமூல் எம்பிக்களை விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐ
டெல்லி: நாரதா வழக்கில் 3 திரிணமூல் எம்பிக்கள் மீது விசாரிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாரதா செய்தி இணையதளம் சார்பில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்களும் காவல் துறை அதிகாரிகள் சிலரும் ஒரு நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் பெறுவதை போன்ற காணொலி பதிவு அதன் மூலம் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்பிக்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள், மேற்கு வங்க அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதில் மேற்கு வங்கத்தின் டம்டம் தொகுதி எம்பி சௌகதா ராய், ஹௌரா எம்பி பிரசூன் பானர்ஜி, தம்லுக் தொகுதியின் முன்னாள் எம்பியும் மேற்கு வங்கத்தின் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி ஆகியோரின் பெயர்களையும் சிபிஐ சேர்ந்திருந்தது.
இதில் சௌகதா ராய், பராசத் எம்பி ககோலி கோஷ் , சுவேந்து அதிகாரி ஆகியோர் தலா 5 லட்சம் பெறுவது போலவும் , பானர்ஜி 4 லட்சம் லஞ்சம் பெறுவது போன்று ரகசிய நடவடிக்கை காணொலியில் இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
நாரதா ஸ்டிங் ஆபரேஷன்.. 3 சிட்டிங் திரிணமூல் எம்பிக்களை விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐ
இந்த வழக்கு விசாரணைக்காக திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரஜா முகர்ஜி, எம்பி ககோலி கோஷ் உள்ளிட்ட 10 பேருக்கு சிபிஐ வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த 4 பேரிடமும் விசாரணை நடத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்துவிட்டால் அந்த 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.