கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு.. தேர்வு கட்டணம் இல்லை.. சிபிஎஸ்இ அறிவிப்பு
டெல்லி: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து விதமான பதிவுக் கட்டணங்களையும் சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பும் உயிரிழப்புகளும் கையை மீறிச் சென்றது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. அந்த நிலை மெல்ல மாறி, இப்போது தான் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
கொரோனா 2ஆம் அலை
இருப்பினும், இந்த 2ஆம் அலையில் பல நூறு குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகினர். இவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்தன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைத் தமிழ்நாடு அரசு தனது அரசு காப்பகங்களில் தங்கவைக்கும் என்றும், அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் இல்லை
இந்தச் சூழலில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து விதமான பதிவுக் கட்டணங்களையும் சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று இந்த நாட்டை மிக மிக மோசமாகப் பாதித்துள்ளது. மாணவர்கள் மீதான கொரோனாவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ போர்டு சிறப்பு நடவடிக்கையாக ஒன்றை அறிவித்துள்ளது.
ரத்து
அதன்படி கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் தேர்வு கட்டணம் உட்பட அனைத்து விதமான கட்டணத்தையும் ரத்து செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலக்கு பெறும் மாணவர்களின் பட்டியலை சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கும் போது அதைப் பள்ளிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் பள்ளிகள்
இந்தியாவில் கொரோனா காரணமாகப் பல மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இடையில் சில காலம் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் 2ஆம் அலை காரணமாகப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும், நாடு முழுவதும் +2 வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இப்போது தான் நாட்டில் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.